tamilnadu

img

தொற்று அதிகமுள்ள கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை வசதிகளை செய்துதருக... முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்....

சென்னை:
கொரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை வசதிகளை செய்துதர வேண்டும்.  ஆக்சிஜன் வசதி மற்றும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:

கொரோனா நோய்த்தொற்றின் 2-ஆவது அலை தமிழகத்தை மோசமாக பாதித்துள்ளது. இருப்பினும், அரசு மேற்கொண்ட நடவடிக்கை களால் படிப்படியாக சற்று நோய்த்தொற்று குறைந்து வருவது ஆறுதலை அளிக்கிறது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து மாநிலத்திலேயே அம்மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. மே 26 அரசின் செய்திக்குறிப்பின்படி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 4268 பேர். தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 35,707 பேர்.  (வீடுகள் மற்றும் கேர் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்டு). 

கோவை மாநகரில் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை என இரண்டு அரசு மருத்துவமனைகள் உள்ளன. சில தனியார்  மருத்துவமனைகளிலும் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்தும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் சிகிச்சைக்காக கோவை மாநகர மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். இந்நிலையில் கோவை மாநகரில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கும், ஆக்சிஜனுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். 

இந்நிலையில் மரணங்களைத் தவிர்த்திட கோவை மாவட்டத்திற்கு ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்திட வேண்டும். மேலும், ஆக்சிஜனும் கோவை மாவட்டத்திற்கு அதிகமாக வழங்கிட வேண்டும்.கொரோனா நோய்த் தொற்று அதிகமாக ஏற்பட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதற்கு விரைந்து ஏற்பாடு செய்தால் ஓரளவுக்கு தொற்று பரவாமல் தடுப்பதற்கும் பயன்படும்.மாநில அரசு விரைந்து கொரோனா நோய்த்தொற்றில் முதல் இடத்தில் உள்ள கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையளிப்பதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;