tamilnadu

img

சந்ததியினரை அழிக்கும் நீட் தேர்வினை கைவிட்டேயாக வேண்டும்... ஏ.கே. ராஜன் குழுவுக்கு தமுஎகச வலியுறுத்தல்...

சென்னை:
மருத்துவச் சேர்க்கையில் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எமது சந்ததியினரை அழிக்கும் பெருங்குற்றத்தை இழைத்துக் கொண்டிருக்கும் நீட் தேர்வினை கைவிட்டேயாகவேண்டும் என்று வலியுறுத்தி ஓய்வுபெற்ற நீதிபதிஏ.கே.ராஜன் குழுவிடம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின்  மாநிலத்தலைவர் (பொறுப்பு)  மதுக்கூர் இராமலிங்கம்,மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தனது மொழியின் கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட மாநில பாடத்திட்டத்தில், தனது மொழியுறவு ஆசிரியர்களினது 12 ஆண்டு கால பயிற்றுவிப்பில் கற்றல் செயல்பாட்டை  மேற்கொள்ளும் மாணவர் அதன் தொடர்ச்சியில் மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்விக்குள் நுழைவதே சரி. (இவ்விசயத்தில் மு.ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் பரிந்துரை கவனங் கொள்ளத்தக்கது). எனவே  தமிழ்நாடு பாடத்திட்டம், கல்விக்கூடம், ஆசிரியத்துவம், 12 ஆண்டுகால படிப்புழைப்பு ஆகியவற்றை மதிப்பற்றதாக்கும் நீட் தேர்வு அவசியமற்றது என தமுஎகச கருதுகிறது.  

12 ஆம் வகுப்புவரை மாநிலப்பாடத் திட்டத்தில் படித்தவர்களை, அவர்களது தாய்மொழியில் அல்லாத, அவர்களது கற்றல் வரம்புக்குத் தொடர்பற்ற, அவர்களது பண்பாட்டுச் சூழமைவுக்கு புறத்தே உருவாக்கப்பட்ட  பள்ளிக்கல்வி வாரிய பாடத்திட்டத்தின்படியான நீட்தேர்வை எழுதவைப்பது இயற்கை நீதிக்கு எதிரானது.   

 இந்தப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் பெரும்பாலானவை உயர் வருவாய்ப் பிரிவினர் மற்றும் ஒன்றிய அரசதிகாரிகள் ஊழியர்கள் குடும்பத்துப் பிள்ளைகளுக்காக நகரங்களில் இயங்கிவருபவை. நாட்டின் மொத்த மாணவர்களில் 10சதத்தினர்கூட படித்திராத அந்தப் பாடத்திட்டத்தின் படியான நீட் தேர்வை அனைவரும் எழுதியாக வேண்டும் என்பதை ஒரு பண்பாட்டுத்தாக்குதலாகவே தமுஎகச அமைப்பு கருதுகிறது.  நீட், எடுத்தயெடுப்பிலேயே மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் பெரும்பகுதி யினரை வடிகட்டி நீக்கிவிடுகிறது. முதல்முறைஎழுதும் தேர்வில் ஒன்றிய பள்ளிக்கல்வி வாரிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களிலும்கூட வெகுசிலரே தேர்ச்சியடைய முடிகிறது. அதற்கும் அவர்கள் பள்ளிக்குள்ளேயோ தனியாகவோ பயிற்சி வகுப்பிற்கு செல்லவேண்டி யுள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்பிற்கென பெருந்தொகை செலவழித்தாக வேண்டும் என்கிற நிலையில் அங்கொரு பகுதியினர்வடிகட்டி நீக்கப்படுகின்றனர். பயிற்சிமையங்கள் உள்ள நகரங்களுக்கு வரமுடியாத கிராமப்புறத்தவர் வடிகட்டி நீக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் அட்டவணைச் சாதியினர், பழங்குடியினர், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் என்பதை கவனத்தில் கொண்டால் அவர்கள் தமது “பிரதிநிதித்துவத்தை” பெறமுடியாமல் போவதைக் காணமுடியும். இவ்வாறாக மொழி, பாலினம்,  சாதி, நிலப்பரப்பு, பொருளாதாரம் எனப் பல்வேறு நிலைகளில் பாரபட்சம் காட்டுகிற நீட்தேர்வை கைவிடுவது சமூகநீதிக்கான நடவடிக்கை எனக் கருதுகிறது தமுஎகச.

 மாநிலப் பாடத்திட்டத்தில் +2வரை படித்து விட்டு வேறொரு பாடத்திட்டத்தில் நீட் எழுதும் இக்கட்டிலிருந்து தப்பிக்க நீட் தேர்வை எழுதுவதற்கு இசைவான பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் ஆங்கிலோ-இந்தி பள்ளிக்கூடங்களை நோக்கி மாணவர்கள் விரட்டியிழுக்கப்படு கிறார்கள். பல தனியார் பள்ளிகள் மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து வெளியேறி மத்திய பள்ளிக்கல்வி வாரியத்தில் இணைகின்றன. நுழைத்த்தேர்வுக்கு இசைவான பாடத்திட்டங்களின் கீழாக புதிய தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகள் மாணவர்களின் தாய்மொழியை ஒரு மொழிப்பாடமாகக்கூட சொல்லித் தருவதில்லை. இதற்கொரு கேடுகெட்ட உதாரணம் தமிழகத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், ஜெர்மனி போன்ற மொழிகளே இங்கு முன்னிலைப்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் பண்பாட்டு வாழ்விற்கு சற்றும்தொடர்பற்ற இத்தகைய கல்வி வளாகங் களுக்குள் அனுப்பப்படும் குழந்தைகள் தமது சொந்த பண்பாட்டு விழுமியங்கள் அற்ற குடிமக்களாக உருவாகும் அவலம் நேர்ந்துகொண்டிருக்கிறது. அத்துடன், பொதுப்பள்ளி இலவசக்கல்வி என்கிற மக்களாட்சி இலக்குகளை நடைமுறையில் போக்கடித்து சாதி, மதம், பாலினம்,பொருளாதாரம் ஆகியவற்றை சமூக மூலதனமாக ஏற்கனவே பெற்றிருப்பவர்களால் வாங்கப்படுகிற ஒரு பண்டமாக கல்வியை மாற்றும் சதியும்நீட் வழியே நடக்கிறது. ஆக, மருத்துவம் பயில விரும்பும் சில ஆயிரம் மாணவர்களின் மீது மட்டுமல்லாது ஒட்டுமொத்த கல்விப்புலத்தின் மீதும் பெருங்கேடுகளை விளைவித்துக் கொண்டிருக்கிறது என்பதாலுமே நீட் தேர்வினை தமுஎகச அமைப்பு எதிர்க்கிறது.    

பிளஸ் 2 முடித்ததுமே மருத்துவம் படிப்பதற்குச் சென்றுவிட வேண்டிய மாணவர்கள்நீட் தயாரிப்புக்காக இழக்கும் வருடங்களை  அவர்களுக்கு யார் திருப்பித்தருவது? செயலூக்கமான மாணவப் பருவத்தின் பெரும்பகுதியை இவ்வாறு தேர்வு குறித்த அச்சத்திலும் தோல்வியினால் துவண்டு தாழ்வுணர்ச்சியில் முடங்குவதும் ஆளுமைச்சிதைவுக்காளாகி தற்கொலையுண்டு மாய்வதுமாக எமது சந்ததியினரை அழிக்கும் பெருங்குற்றத்தை இழைத்துக்கொண்டிருக்கும் நீட் தேர்வினை கைவிட்டே யாக வேண்டும்.  

நீட் தேர்வினைக் கைவிட்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கையை நடத்தும்போது கைக்கொள்ள வேண்டிய இரண்டு நடவடிக்கைகள்:  

1.     அந்தந்த வகுப்புக்கான பாடங்களை மட்டுமே அந்தந்த வகுப்பில் நடத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.  பிளஸ் 2 பாடங்களை முந்தைய கல்வி ஆண்டிலிருந்தே நடத்தி மாணவர்களை வதைத்து மதிப்பெண்களை போலியாக பெருக்கிக்காட்டும் மோசடி தடுக்கப்பட வேண்டும்.    

2.     அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும்மாணவர்களின் எண்ணிக்கை விகிதாச் சாரத்திற்கேற்ப மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியின் இடங்கள் இப்போதைக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இது நாளடைவில் அரசுப்பள்ளிகளுக்கான முன்னுரிமையாக மாற்றப்பட வேண்டும்.     இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

;