tamilnadu

img

நாகை காவியன் மறைவு... தமுஎகச இரங்கல்...

தமுஎகச சார்பில் மாநில தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர்  ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தி: 

தமுஎகச நாகை மாவட்டத் தலைவர் தோழர் நாகை காவியன் மறைவுக்கு தமுஎகசமாநிலக் குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.தமிழாசிரியராக பணியாற்றிய தோழர் காவியன் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அமைப்பை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றியவர். குறிப்பாக, நாகை உள்ளிட்டஇடங்களில் நடைபெற்ற கலை இரவுகளை அவர் தொகுத்து வழங்கும் பாணி மாநில அளவில் புகழ் பெற்றது. பாடலாசிரியர், கவிஞர், ஓவியர் என பன்முக திறமைகொண்ட அவர், தன்னுடைய ஆற்றல்முழுவதையும் உழைக்கும் மக்கள்இயக்கத்திற்காகவும், இலக்கியத்திற்காக வுமே பயன்படுத்தினார். ‘இதயத்தை தேடுகிறேன்’ எனும் கவிதை நூல் உட்பட பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். ஏராளமான பாடல்களையும் எழுதியுள்ளார். தமுஎகசவின் நாகை மாவட்ட தலைவராகவும், மாநிலக்குழு அழைப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.

தந்தை பெரியார் தலைமையில் சாதி, மத மறுப்பு திருமணம் செய்து கொண்டஅவர், தன்னுடைய மகள், மகனுக்கும் சாதி மறுப்பு திருமணங்களை செய்வித்தவர். தீக்கதிர் ஏட்டின் மாவட்ட செய்தியாளராகவும் பணியாற்றி வந்தார். அவரை இழந்து துயருற்றுள்ள இணையர் சரோஜா, மகள் ஊடகவியலாளர் கவின்மலர், மகன் மலர்வண்ணன் ஆகியோருக்கு தமுஎகச தன்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது. தோழர் காவியன் உடல் மருத்துவ ஆய்வுக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தாரால் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;