tamilnadu

img

ஒரே ஊர் மக்களை ஒருவருக்கு ஒருவர் விரோதி ஆக்கிடும் செயல் -கே.பாலகிருஷ்ணன்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான பொருளில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை ஒரே ஊர் மக்களை ஒருவருக்கு ஒருவர் விரோதி ஆக்கிடும் செயல் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது டுவிட்டர் பதிவில், "சுதந்திரத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறவுள்ள கிராம சபை கூட்டங்களில் விவாதிக்க வேண்டிய பொருள்களின் பட்டியலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக ஆணையர் சுற்றறிக்கையில் அனுப்பியுள்ளார்.
அதில், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஒன்பதாவது பொருள் கூறுகிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியதாகும். நீர்நிலைகளை பாதுகாப்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. ஆனால், 'ஆக்கிரமிப்பு' என்ற பெயரில் இடிக்கப்படுவது எளிய மக்களின் வீடுகளாகவே உள்ளன. அதற்கு எதிரான நீதிமன்ற வழக்குகளும் உள்ளன.
இந்தப் பிரச்சினைகளில் கிராம சபை தீர்மானம் நிறைவேற்ற சுற்றறிக்கை வெளியிடுவது தவறான விளைவை உருவாக்கும். ஒரே ஊரில் குடியிருக்கும் மக்களில் ஒருவருக்கு ஒருவர் விரோதி ஆக்கிடும்.எனவே, சுற்றறிக்கையின் 9 வது பொருளை நீக்குவதுடன், அனைத்து மக்களின் வாழ்விட உரிமையை பாதுகாக்க கிராம சபைகள் உறுதியேற்க செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறோம்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

;