அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாண்வியின் கல்விச் செலவை ஏற்கவும், மாணவி தனது படிப்பைத் தொடர்வதையும் அண்ணா பல்கலைக்கழகம் உறுதி செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், 4 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதை தொடர்ந்து இச்சம்பவத்தில் ஞானசேகரன் (37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்டு ஞானசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை .தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "முதல் தகவல் அறிக்கை எவ்வாறு கசிந்தது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டிருக்கும் விதம் மிக மோசமாக உள்ளதாகவும், புகார் அளிக்க வந்த பெண்ணிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறும்போது, ஒரு காவல்துறை அதிகாரி கூட உதவி செய்ய முடியாதா என்றும், பாதிக்கப்பட்ட மாணவி மீது குறை கூறும் வகையில் தான் முதல் தகவல் அறிக்கை உள்ளது எனவும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், முதல் தகவல் அறிக்கை பதிவேற்றம் செய்தவர்கள் யார் என்பதை அறியும் வசதி இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் விசாரணை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று நடந்த விசாரணையில், "FIR-ஐ, காவல்துறை வெளியிடவில்லை; IPC-இல் இருந்து BNS சட்டத்துக்கு மாற்றியபோது சில தொழில்நுட்ப காரணங்களால் FIR, Citizen Portal-லில் பதிவானது. FIR-ஐ 14 பேர் தங்கள் செல்போன் மூலமாக எடுத்துள்ளனர்; அவர்கள் யார் என்பது கண்டுபிடித்து விட்டோம். FIR கசிவு தொடர்பாக ஆணி வேர் வரை விசாரணை நடத்தப்படும்.
குற்றச் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் ஞானசேகரனின் செல்போன் Airplane Mode-இல் தான் இருந்தது. அவர் வேறு ஏதாவது செல்ஃபோன் வைத்திருந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.” என அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளித்துள்ளார்.
இதை அடுத்து, "மாணவி தைரியமாக வந்து புகார் அளித்தது பாராட்டுக்குரியது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாணவியின் கல்விச் செலவு, விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் பல்கலைக்கழகமே ஏற்க வேண்டும்.
மாணவிக்கு தேவையான கவுன்சிலிங் மற்றும் உதவிகளை வழங்க வேண்டும். மாணவி தனது படிப்பைத் தொடர்வதை பல்கலைக்கழகம் உறுதி செய்ய வேண்டும்” என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இவ்வழக்கை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.