tamilnadu

img

மத வாதத்தை தூண்டும் சக்திகளை வீழ்த்துவோம்! அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதில்

சென்னை, ஜூன் 28- தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கு. செல்வப் பெருந்தகை, இந்து - இஸ்லாமியர் இடையே உள்ள உறவை ஒரு புத்தகமாக வெளியிட முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆண்டாண்டு காலமாக இந்து - இஸ்லாமியர் நல்லுறவை வெளிப்படுத்தும் 20-க்கும் மேற்பட்ட கோயில்கள் தமிழகத்தில் உள்ளன. இந்த நடைமுறையை மக்களிடம் இருந்து தவிர்க்க நினைக்கும் மதவாதத்தை தூண்டும் சக்திகளை வீழ்த்த வேண்டும் என்பது தான் இந்த ஆட்சியின் கொள்கையாகும். 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சராயு கோவிலில் அனைத்து மதத்தினரும் சேர்ந்து தான் வழிபடுகின்றனர். இங்கு முதல் மரியாதையே இஸ்லாமியர்களுக்குத் தான். புதுக்கோட்டை ராவுத்தர் மசூதியில் இந்துக்கள் வழிபட்ட பிறகு தான் இஸ்லாமியர்கள் வழிபட முடியும்.

அதேபோல், புதுக்கோட்டையில் இஸ்லாமியர்கள் வடம் தொட்ட பிறகுதான் தேரோட்டம் நடைபெறும் வகையில் கோயில்கள் உள்ளன. பல இந்துக் கோயிலில் இஸ்லாமியர்களை காவல் தெய்வமாக வழிபடுகின்றனர்.

இந்து - இஸ்லாமியர் இடையேயான உறவு முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் புத்தகம் இந்து சமய அறநிலையத்துறை மூலம் முதலமைச்சரின் அனுமதி யுடன் வெளியிடப்படும்.

இவ்வாறு பி.கே. சேகர் பாபு தெரிவித்தார்.