கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் ஹரி பத்மனை, போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் சார்பில் ருக்மணி தேவி நுண் கலைக் கல்லூரி உள்ளது. இங்கு பயிலும் மாணவிகளுக்கு, ஆசிரியர் ஹரி பத்மன், அலுவலர்கள் சஞ்சித் லால், சாய் கிரு ஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த மார்ச் 29-ஆம் தேதி தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா நேரடியாக கலாஷேத்ராவுக்கு வந்து அங்கு நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி இருந்தார். இந்த நிலையில், மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, மாணவர்கள் ஒன்றிணைந்து மின்னஞ்சல் மூலமாக ஒன்றிய கலாச்சார அமைச்சகத்துக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் புகார் அனுப்பினர்.
இதனிடையே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மகளிர் ஆணையம் இந்த புகாரை, தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. கடந்த மார்ச் 31-ஆம் தேதி தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி கல்லூரிக்கு நேரில் சென்று மாணவர்களிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார். மாணவிகளிடம் போராட்டத்தைத் தற்காலிகமாக திரும்பப்பெற வலியுறுத்தினார். மாணவிகளும் போராட்டத்தைத் தற்காலிகமாக திரும்பப் பெற்றனர். மேலும், கல்லூரியின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டு என ஏ.கே.குமாரி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், தனிப்படை போலீசார் இன்று ஹரி பத்மனை கைது செய்துள்ளனர். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணின் அடக்க உணர்ச்சிக்குக் குந்தகம் விளைவித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.