tamilnadu

ஜூலை 9 புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு

ஜூலை 9 புதுச்சேரியில்  முழு அடைப்பு போராட்டம்   அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி, ஜூன் 17- புதுச்சேரியில் வரும் ஜூலை 9 ஆம் தேதி பந்த் போராட்டம் நடத்துவது என அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் வரும் ஜூலை 9 ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இப்போராட்டத்தை புதுச்சேரியில் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டை ஏஐடியூசி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) நடைபெற்றது. இதில் புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர், திட்டம் சார்ந்த தொழிலாளர் உட்பட அனைவருக்கும் மாதத்துக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9000 மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பவும் அமலாக்க வேண்டும், போனஸ், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை ஆகியவற்றுக்கு உள்ள உச்சவரம்பை நீக்க வேண்டும், பணிக்கொடை தொகையை அதிகப்படுத்த வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, உணவு, மருந்து, வேளாண் இடுபொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய கலால் வரியை கணிசமாக குறைத்து, உணவு பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தி, பொது விநியோக திட்டத்தை பரவலாக்க வேண்டும், மின்சாரத் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், மின்சாரத்தை தனியார்மயமாக்கும் திட்டம் மற்றும் ஸ்மார்ட் மீட்டர் முறை ஆகியவற்றை கைவிட வேண்டும், கல்வி, மருத்துவம், தண்ணீர் அனைவருக்கும் கிடைப்பதை உரிமையாக்க வேண்டும், புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி வரும் ஜூலை 9-ம் தேதி வேலை நிறுத்த பந்த் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. முன்னதாக வரும் 23, 24, 25 ஆகிய தினங்களில் அனைத்து நிறுவனங்களுக்கும் ஆதரவு கேட்டு கடிதம் கொடுப்பது, வரும் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடத்துவது, ஜூலை 3, 4, 5 ஆகிய தேதிகளில் புதுச்சேரி முழுவதும் வேலை நிறுத்த பந்த் போராட்டத்தை விளக்கி வாகன பிரச்சாரம் நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்துக்கு ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். மாநில கவுரவ தலைவர் அபிஷேகம், மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா மற்றும் சிஐடியு, ஐஎன்டியுசி, எல்பிஎப், ஏஐசிசிடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தின் தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.