tamilnadu

img

ஜூலை 27 - நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதல்வர் அறிவிப்பு

சென்னை, ஜூலை 23- ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது:

கூட்டணி ஒப்பந்தம்!

ஆனால், இந்த ஆண்டிற்கான ஒன்றிய  அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கை யாகத் தெரியவில்லை. மாறாக, அரசியல் காரணங்களுக்காக பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களை ஆளுவோருடன் மேற் கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் போன்று உள்ளது. 

வன்மத்தை கக்கும் அறிக்கை 

அரசியல் சுயலாபங்களுக்காக குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், ‘மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன’ என்ற ஒரே காரணத்திற்காக நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையானது, இந்திய மக்களாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களைச் சிதைத்திடும் வகையில் அமைந்துள்ளது. நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள ஒன்றிய பாஜக அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது. தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடியது. 

தமிழகத்துக்கு அநீதி!

சமீபத்தில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளை சீரமைக்க பேரிடர் நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்திய போதிலும், இந்த ஒன்றிய வரவு-செலவுத் திட்டத்திலும் போதிய நிதி வழங்கப்படவில்லை. 

ரூ. 37,000 கோடி பேரிடர் நிவாரணமாக வழங்குவதற்கு ஒரு விரிவான அறிக்கையை தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த நிலையில், ஒன்றிய அரசு சுமார் 276 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை வழங்கியுள்ளது. அதுவும் சட்டரீதியாக வழங்கப்பட வேண்டியது தான். 

ஆனால், உத்தரகண்ட், சிக்கிம், இமாசலப் பிரதேசம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்கள் மட்டுமின்றி, பீகார் மாநிலத்திற்கு மட்டும் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாயை பேரிடர் தடுப்பு பணிகளுக்காக வழங்க உள்ளது. இது, தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதியாகும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு அறிவித்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எந்த ஒரு நிதியும் இதுவரை வழங்கவில்லை. இது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் செயல்பாட்டை பெரிதும் பாதித்து, சென்னை மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்த ஒரு புதிய ரயில் திட்டங்கள், நெடுஞ்சாலைத் திட்டங்கள் இடம்பெறவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது.

மொத்தத்தில் தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப் பட வேண்டும் என்பது போல் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கை இது. தமிழக மக்கள் இவ்வாறு வஞ்சிக்கப்படுவது இந்திய நாட்டின் கூட்டாண்மைத் தத்துவத்திற்கு எதிரானது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு கோரியுள்ள பல்வேறு திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மாநிலத்திற்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். 

முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 40க்கு 40 என்ற வெற்றியை இந்தியா கூட்டணிக்கு அளித்த தமிழ்நாட்டு மக்கள் மீது ஒன்றிய ஆட்சியாளர்கள் எவ்வளவு ஆத்திரத்தில் இருக்கிறார்கள் என்பதுதான் பட்ஜெட்டில் வெளிப்பட்டுள்ளது. தமிழ்நாடு பிடிக்கும் திருக்குறள் பிடிக்கும் என்றெல்லாம் மோடி கூறினார். ஆனால் தமிழ்நாடு என்ற வார்த்தை கூட பட்ஜெட்டில் இல்லை. எனவே தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் ஜூலை 27 அன்று பிரதமரின் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதே சரியானது என்று நினைக்கிறேன். மேலும் நம்முடைய தமிழ்நாட்டை எம்.பி.க்கள் புதனன்று தில்லியில் போராட்டம் நடத்தவும் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.