tamilnadu

img

பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: பெண் எஸ்பிக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு

பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் பெண் எஸ்.பிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 
தமிழக போலீஸ் துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி-யாக பணியாற்றி வருபவர் ராஜேஷ்தாஸ். தூத்துக்குடி எஸ்.பி, மணிமுத்தாறு சிறப்பு காவல்படை கமாண்டண்ட், தென் மண்டல ஐஜி, சென்னை தெற்கு இணை ஆணையர் என பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார் இவர். அண்மையில் இவரை தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி-யாக தமிழக அரசு நியமித்தது.
இவர் மீது தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பாலியல் புகார்  அளித்துள்ளார். அண்மையில் முதல் அமைச்சர் டெல்டா மாவட்ட சுற்றுப் பயணம் சென்றபோது ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ்தாஸ் உடன் சென்றதாகவும், அப்போது அவரை வரவேற்க வந்த ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவரிடன் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறிய பாலியல் புகார் அடிப்படையில் ராஜேஷ்தாஸ் மீது விசாரிக்க குழு அமைத்திருப்பதாக தமிழக அரசு அதிகாரபூர்வமாக அரசாணை வெளியிட்டது. அதன்படி அந்தக் குழுவுக்கு திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் ஐஏஎஸ் தலைமை வகிப்பார். போலீஸ் தலைமை அலுவலக கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் ஐபிஎஸ், நிர்வாகப் பிரிவு ஐஜி அருண் ஐபிஎஸ், காஞ்சிபுரம் டிஐஜி சாமுண்டீஸ்வரி ஐபிஎஸ், டிஜிபி அலுவலக தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு, இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் என்கிற அமைப்பின் திட்ட மேலாண்மை தலைவர் லொரெட்டா ஜோனா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
பணியிடத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் கொடுமைகளுக்கு உரிய சட்டப் பிரிவுகளின்படி இந்த 6 பேர் குழு விசாரணை நடத்தும். அதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. 
இதற்கிடையே ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாலியல் குற்றச்சட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் பெண் எஸ்பிக்கு மூத்த அதிகாரியால் பாலியல் தொல்லை தரப்பட்டது குறித்து ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் விசாரணையை நேர்மையாக நடத்த வேண்டும். பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் உறுதியுடன் செயல்படும் என்று தெரிவித்துள்ளது. 
 

;