tamilnadu

img

அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தேவை... மு.க.ஸ்டாலின்....

சென்னை:
“அனைத்து சமூகங்களையும் உள் ளடக்கிய வளர்ச்சிதான் தேவை என்றும் அந்த நோக்கத்துடன் தமிழ் நாடு வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத் தில் பங்கேற்ற முதலமைச்சர் பேசியது தொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு அறிவித்திருக் கும் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித் தன்மை வாய்ந்தவர்கள். குழு உறுப்பினர்கள் ஐந்து பேரில் மூவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பதும், அவர்கள் உலகப் புகழ்பெற்ற ஆளுமைகளாக வளர்ந்திருப்பதும் நம் மாநிலத்துக்கு கிடைத்த பெருமையாகும்.சமூக நலன் சார்ந்த வளர்ச்சிதான் தமிழ்நாட்டை இந்தளவுக்கு முன் னேற்றி இருக்கிறது என்பதை ஜீன் டிரீஸ் விரிவாகச் சொல்லி இருக்கி
றார். ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது விநியோகத் திட்டம் ஆகிய இரண்டும் சேர்ந்து தமிழ்நாட்டை எப்படி வளர்த்துள்ளது என்பதை அவர் எழுதி இருக்கிறார். இந்தக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு அடித் தளம் எது என்பதையும்  “1920-ல் பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக் கம் உள்ளிட்ட பல முன்னோடி சமூக சீர்திருத்தங்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சாதிகள் பெற்றுள்ள அரசியல் அதிகாரம், கவர்ச்சிகர அரசியல் பிடிமானம், தமிழ்ச்சமூகத்தில் ஆக்கப்பூர்வமான பெண் அமைப்புகள் ஆகியவைதான் இந்தக் கட்டமைப்பை தமிழ்நாட்டில் உருவாக்கக் காரணமாக அமைந்தன என்பதையும் அமர்த்தியா சென்னும் எழுதியிருக்கிறார்.

இதைவிட தந்தை பெரியாருக்கு, பேரறிஞர் அண்ணாவுக்கு, கருணாநிதிக்கு வேறு பாராட்டு தேவையில்லை. இந்த நோக்கத்துக்கு வழிகாட்டவே பொருளாதார வல்லுநர் களை அழைத்துள்ளோம். பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளில் பொதுவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாடுகள் குறித்த ஆலோசனைகள் தர வேண்டும்.பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு சமமான வாய்ப்புரிமை வழங்கவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பான ஆலோசனைகளும் வழங்க வேண்டும்.மாநிலத்தின் மொத்தமான நிதி நிலையைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கு சேவை செய்வதற்கான மாநிலத் திறனை மேம்படுத்தவும், புதிய திட்டங்கள் மற்றும் நிறைவேற்றக் கூடிய தீர்வுகளுக்கான ஒரு வலுவான ஆலோசனை மையமாக நீங்கள் திகழ வேண்டும்.எவ்வித பிரச்சனைகளுக்கும் ஆராய்ந்து சாத்தியப்படக்கூடிய சிறந்த சமூகப் பொருளாதாரத் தீர்வுகளை வழங்க வேண்டும். உங்களது ஆலோசனைகளை உடனுக்குடன் எங்களுக்குத் தெரிவியுங்கள். இப்படி ஒரு குழுவை அமைத்ததன் மூலமாக தமிழ்நாட்டின் பெருமை உலகளாவியதாக ஆகிவிட்டது.

மக்களின் சமூக மரியாதை உயர வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அது அமைய வேண்டும். இக்கனவுகள் சாதாரணமாக நிறைவேறி விடாது என்று எனக்கும் தெரியும். நமது சிந்தனை ஒன்றாகவும் - உண்மை நிலவரம் வேறாகவும் இருக்கிறது என்பதை நானும் அறிவேன். தமிழ்நாடு அரசு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் இருக்கிறது. பொதுத் துறை நிறுவனங்கள் 2 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கின்றன.நிதி ஆதாரம் என்பது விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சில துறைகளின் மூலமாக மட்டும்தான் வருகிறது. வரி வசூலில் இருந்த மாநில உரிமைகளை ஒன்றிய அரசு ஜிஎஸ்டி மூலமாக பறித்துவிட்டது. அதனால் வரி வசூலை நம்ப முடியாது.நமது வளங்களைக் கொண்டு நம்மை வளப்படுத்திக் கொள்ளும் நிலைமையில் இருக்கிறோம். அதற்கென உள்ள வழிமுறைகளை தமிழ்நாட்டு அரசுக்கு காட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ் நாட்டில் இயற்கை வளம் உள்ளது. இங்கு சீரான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. மனித வளம் உள்ளது. சமூகப் பொறுப்புணர்வு உள்ளது. உலகம் அறிந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம் தான் திமுக. நமது வளர்ச்சி என்பதும் அதன் அடிப் படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனிதரும் மகிழும் வகையில், இது எமது அரசு என்று சொல்லி அனைவரும் பெருமைப்படும் வகையில் இந்த அரசு இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்த ஆசையை - கனவை நிறைவேற்றும் கருவிகளில் நீங்களும் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாம் தொடர்ந்து சந்திப்போம். சிந்திப் போம். வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.” என்று தெரிவித்துள்ளார்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;