tamilnadu

img

புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம்! பாஜக அரசின் ஜனநாயக படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தி, ஒன்றிய பாஜக அரசு செய்த ஜனநாயக படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மோடி அரசு தனது கடந்த ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்யா ஆகிய புதிய சட்டங்களை எதிர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்து விட்டு அவசர, அவரசமாக சட்ட அமைச்சருக்கு பதிலாக உள்துறை அமைச்சரே மசோதாவை சமர்ப்பித்து எவ்வித விவாதமின்றி ஜனநாயக விரோதமாக ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றிக் கொண்டது. மோடி அரசின் இந்த ஜனநாயகப் படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஏற்கனவே வன்மையாக கண்டித்திருந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348ஆவது பிரிவு, சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டுமெனக் கூறுகிறது. ஆனால், மேற்படி மூன்று சட்டங்களின் பெயர்கள் சமஸ்கிருத ஒலியமைப்பில் இந்தி மொழியில் அரசியலமைப்பிற்கு விரோதமாக உள்ளது. மேலும், பல்வேறு மொழிகள் பேசும் மாநில அரசுகளின் உரிமை, கூட்டாட்சி தத்துவம், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகவும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர் காலத்து தேசதுரோக சட்டப்பிரிவை (124 A - IPC)  நீக்கிவிட்டு அதைவிட கொடுமையான சட்டப்பிரிவு புதிய தண்டனைச் சட்டத்தில் சேர்த்துள்ளது. மேலும், விசாரணைக்காக கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு 15 நாட்கள் ரிமாண்ட் என்பதை 90 நாட்கள் என நீட்டித்திருப்பதும், ரிமாண்ட் செய்யும் அதிகாரத்தை நிர்வாகத்துறை நடுவருக்கு (தாசில்தார்) வழங்கியிருப்பதும் காவல்துறைக்கு பல்வேறு பிரிவுகளில் எல்லையில்லா அதிகாரங்களை வழங்கியும், சட்டரீதியில் ஜனநாயக உரிமைகளை மறுத்தும்,  போலீஸ் ராஜ்ஜியத்தை உருவாக்கவும் புதிய சட்டங்கள் முனைந்துள்ளன. பழைய சட்டத்தில் உள்ள மதவெறிக்கு எதிரான பிரிவுகள் நீக்கப்பட்டு; மதவெறி மற்றும் வெறுப்பு பேச்சிற்கு ஆதரவாக புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மதவெறி சக்திகளுக்கும் கார்ப்பரேட்மயத்திற்கும் ஆதரவாகவே மேற்படி மூன்று சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. இச்சட்டங்களினால் சாதாரண ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சிறுபான்மை மக்களையும், மோடி அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுபவர்களையும் குறிவைத்து தாக்குவதற்கும், நீதித்துறையில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கோடும் இச்சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மேற்படி சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு உள்ளிட்டு பல்வேறு மாநில அரசுகளும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்களும், பொதுமக்களும் போராடி வருகின்றனர். தமிழகத்தில் இரண்டு நாட்களாக மாநிலம் முழுவதும் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து போராடி வருகின்றனர்.

எனவே, ஒன்றிய பாஜக அரசு பொதுமக்களின் நலன் கருதி மேற்படி மூன்று சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை திரும்பப்பெற வேண்டுமெனவும், நாடாளுமன்றத்தில் இச்சட்டங்கள் குறித்து விரிவான ஜனநாயகப் பூர்வமாக விவாதம் நடத்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

;