tamilnadu

img

மன வலியோடு கேட்கிறேன்.... தமிழ் மக்கள் உயிர்கள் முக்கியமில்லையா? மத்திய சுகாதார அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி.,கேள்வி.....

மதுரை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:

தேசிய சுகாதார முகமையின் இயக்குநர் டாக்டர் சஞ்சய் ராய் அவர்கள் வெளியிட்டுள்ள மே 5 தேதியிட்ட “மாநிலங்களுக்கான மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு திட்டம்” (D No. Z 20015/ 46/ 2021- ME - I) பார்த்து அதிர்ந்து போய் விட்டேன். தமிழகத்திற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 

10 நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு 280 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போதுமாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் ஆக்சிஜன் தேவையை செங்குத்தாக அதிகரித்துள்ளது. மருத்துவ நிபுணர்கள் கருத்துப்படி 500 மெட்ரிக் டன்னாக தமிழகத் தேவை உயர்ந்திருக்கிறது. மத்திய அரசு சார் நிறுவனங்களின்  சில மதிப்பீடுகளே 400 மெட்ரிக் டன்கள் என்று கூறுகிறது. ஆனால் மேற்கண்ட கடிதம், அதில் உள்ள திட்டம் இது பற்றி மௌனம் சாதிக்கிறது. அதன் பொருள், தமிழகத்திற்கு கூடுதல் ஒதுக்கீடு இல்லை. நான் ஒரு கேள்வியை மன வலியோடு எழுப்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.  தமிழ் மக்கள் உயிர்கள் முக்கியமில்லையா?

செவ்வாய் இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 13 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம். அங்கு கோவிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 447 பேரில் 309 பேர் ஆக்சிஜன் தேவைப்படு பவர்கள். இது தனித்த உதாரணம் அல்ல. தமிழகத்தின் பல பகுதிகளில் இதுதான் நிலைமை. பல அரசு, தனியார் மருத்துவ மனைகள் பல சிரமங்களோடும், உயிர் பயத்தோடும் வரும் நோயாளிகளை திருப்பி அனுப்பி வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகக் கூடும். இந்த நிலைமையில் ஆக்சிஜன் ஒதுக்கீடு திட்டம் தமிழகத்திற்கு நீதி தரவில்லை. தமிழக அரசின் தொடர்ந்த வேண்டுகோள்களுக்குப் பின்பும் ஒதுக்கீடு அதிகரிப்பு மறுக்கப்பட்டுள்ளது. நான் வருத்தத்தோடு சொல்கிறேன். ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிர் இழப்புகள் ஏற்பட்டால் தமிழக மக்களுக்கு மத்திய அரசே பதில் சொல்ல வேண்டி வரும். இது அவசர வேண்டுகோள். காலதாமதம் எதுவுமின்றி உங்கள் தலையீட்டை எதிர் நோக்குகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் மண்ணில் ஒரு உயிர் கூட ஆக்சிஜன் பற்றாக்குறையால், மருத்துவ ஏற்பாடுகளில் உள்ள இடைவெளிகளால் வீழ்ந்து விடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

;