tamilnadu

img

மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை சந்திக்க தடை....

சென்னை:
கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் சந்திக்க உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குனர் ஆகியோருக்கு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா தொற்றை தேசிய பேரிடராக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப் பதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அவ்வப் போது பல்வேறு உத்தரவுகளை அரசு பிறப்பித்து வருகிறது.இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் 71 (1) மற்றும் (2) (டி) ஆகிய விதிகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வர விரும்புகிறேன். அதன்படி, மற்றொருவருக்கு தொற்று ஏற்படுத்துவது தடை செய்யப்பட்டு உள்ளது.எனவே கொரோனா தொற்றுக்கு ஆளாகி, கொரோனா சிகிச்சைக்காக அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகள் (சி.டி.எச்.), மருத்துவ நிறுவனங்கள், கொரோனா சுகாதார மையங்களில் (சி.எச்.சி.) உள்ள தனிமைப்படுத்தும் வார்டுகளில் அனுமதிக்கப் பட்டு உள்ளவர்களை சந்திக்க வருவோரையும் (விசிட்டர்கள்), கவனிக்க வருவோரையும் (அட்டெண்டர்) அந்த விதிகளில் கூறப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தடை செய்ய வேண்டும்.நோயாளிகளை கவனிக்க ‘அட்டெண்டர்’ அவசியமாகும் பட்சத்தில், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு உள்ள கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

நோயாளியின் நிலை குறித்த தகவல்களை அவர் களின் உறவினர்களுக்கு அளிக்கும் வசதியும் செய்து தரப்பட வேண்டும்.எனவே உங்கள் நிர்வாகத்திற்கு கீழ்ப்பட்டுள்ள மருத்துவ நிறுவனங்களில் இந்த உத்தரவுகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்யுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;