tamilnadu

img

நீலகிரி, கோவையில் கனமழை நீடிக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகத் தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். தேனி, திண்டுக்கல், உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைப்போல் வருகின்ற 17 ஆம் தேதி நீலகிரி கோயம்புத்தூர், தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும், இன்று முதல் வருகிற 19 ஆம் தேதி வரை தென்கிழக்கு வங்கக் கடல், தெற்கு அந்தமான், கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் மற்றும் வட கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம், என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

;