tamilnadu

தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்து

சென்னை, ஆக. 14-
நாட்டின் 78-ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ், சிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இறையாண்மையை பாதுகாப்போம்!

“மதவெறி சக்திகளை மாய்த்திடவும், மாநில உரிமைகள் பறிப்பதை முறியடிக்கவும், ஜனநாயகத்தையும், தேச ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் கட்டிக் காத்திடவும் சுதந்திர திருநாளில் சூளுரையேற்போம். 

இந்தியாவில் வகுப்புவாத சக்திகள் தலை தூக்காமல் முறியடிக்கிற பணியை மிகச் சிறப்பாக செய்கிற வகையில் பரப்புரை மேற்கொண்டு இந்திய இறையாண்மையை பாதுகாப்போம்” என்று காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தமது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

சவால்களை எதிர்கொள்வோம்!

“உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட இந்தியாவில், அவர்களது எதிர்காலம் இருள் மயமாக்கப்படுகிறது. இந்திய மக்கள் முன்புள்ள இவ்வளவு சவால்களையும் எதிர்கொண்டு, அனைவருக்கும் வாய்ப்புகளை பகிர்ந்து, எல்லோரும் ஒன்றாக முன்னேறுவது இந்திய விடுதலைப் போராட்டத்தை போன்றே, இன்னொரு தவிர்க்க இயலாத போராட்டமாகும். 

நமது தாய்த் திருநாட்டின் விடுதலையை தக்க வைத்துக் கொள்ள, விடுதலைப் போராட்டத்தின் பயன்கள் ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்க, தொடர் போராட்டங்களை முன்னெடுக்க சபதம் ஏற்போம்” என சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வாழ்த்து கூறியுள்ளார்.