அவதூறுகளை பரப்பும் மாரிதாஸுடன் என் தரப்பிலிருந்து எந்த வித சமரசமும் இல்லை என்று மூத்த ஊடகவியலாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
சங்பரிவார் கும்பலைச் சேர்ந்த மாரிதாஸ் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் பணியாற்றிய முதன்மை செய்தி ஆசிரியர் குணசேகரன், குறித்து அவதூறாக தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அதில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் பணிபுரியும் பெரும்பாலானோர் திராவிடர் கழகம் மற்றும் திமுக'வின் பின்னணியில் செயல்படுவதாகவும் கம்யூனிஸ்டுகள் மற்றும் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களை மட்டுமே குணசேகரன் பணியில் சேர்த்ததாகவும் ஆதாரமற்ற வகையில் பொய் குற்றச்சாட்டுகளை கூறி வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இந்த வீடியோக்கள் புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூஸ் 18 நிறுவனம் வினய் சராவகி பெயரில் தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக கூறி போலி மின்னஞ்சலையும் தனது யூடியூப் சேனலிலும் மாரிதாஸ் வெளியிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த வினய் சராவகி தன்பெயரில் மோசடி மெயில்கள், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தன் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். இது மாரிதாஸ் உள்ளிட்ட சங் பரிவார் கும்பலின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தியது.
இதையடுத்து நியூஸ் 18 நிர்வாகம் தங்களுடைய நிறுவனம் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்ட மாரிதாஸிடம் 1.5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரிக்கும் உரிய நீதியிடம் பட்டியலிடப்படும் நிலையில் மனுதாரர் தரப்பு மாரிதாஸ் உடன் சமரசத்திற்கும் தயாராக உள்ளாதா என்பதை அறிய விரும்பிய சூழலில் என் தரப்பில் எந்த வித சமரசமும் இல்லை என்று ஊடகவியலாளர் குணசேகரன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என் தரப்பிலிருந்து எந்த சமரசமும் இல்லை. தீங்கிழைக்கும் அவதூறு மற்றும் துஷ்பிரயோக நிகழ்ச்சி நிரலுக்கு நான் பலியானேன். நீதிக்கான எனது போராட்டம் அதே வீரியத்துடன் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.