tamilnadu

img

டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்குக... டிஜிபிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்....

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி கோரி திங்களன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், தில்லியில் கடந்த அறுபது நாட்களுக்கு மேலாக வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகளின் வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள். அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக ஜனவரி 26 குடியரசு தினத்தன்று விவசாயிகளின் அடையாளமான டிராக்டர் அணிவகுப்பு நடத்திட அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.அரசின் சார்பில் நடைபெற இருக்கும் குடியரசுதின விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பிறகு விவசாயிகள் தேசியக்கொடியுடன் டிராக்டர் அணிவகுப்பு நடத்திட அறிவித்துள்ளனர். 

இதனை ஏற்று தில்லியில் டிராக்டர் அணிவகுப்பு நடத்திட தில்லி காவல்துறை அனுமதி அளித்துள்ளது. பெங்களூரிலும் டிராக்டர் பேரணி நடைபெறவுள்ளது. இதற்கும் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதிமறுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பா ளர்கள் உத்தரவிட்டுள்ளது சரியல்ல என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.இந்தப் பிரச்சனையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு தமிழகம் முழுவதும் ஜனவரி 26 அன்று அமைதியாக நடைபெறவுள்ள விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிப்பதுடன், உரிய பாதுகாப்பும் வழங்கிட  வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

;