tamilnadu

img

ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு: வலுக்கும் கண்டனங்கள்

மதச்சார்பின்மை குறித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸின் ஊதுகுழலாகவே செயல்பட்டு வருவது யாவரும் அறிந்த ஒன்று. ஆளுநராக செயல்படாமல் தொடர்ந்து பாஜகவின் கருத்துகளை வெளிப்படையாக பேசி அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாவது வழக்கம்.

இந்நிலையில், அண்மையில் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மதச்சார்பின்மையே இந்தியாவிற்கு ஏற்புடையதல்ல என்றும், அது ஐரோப்பிய கருத்தாக்கம் என்றும் பேசியுள்ளார்

ஆளுநரின் இந்த பேச்சுக்கு தேசிய அளவில் கண்டனங்கள் வலுத்து வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணான கருத்துக்களைத் தெரிவித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சிவசேனா(தாக்கரே) கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, ஆளுநர் பதவி கூட ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து வந்ததுதான். அதை முதலில் ஒழித்து விடுவோமா? என கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கம் போல் உளறிக் கொட்டியிருக்கிறார். கூட்டாட்சி கூட ஐரோப்பிய கருத்தாக்கம் தான். அதை மறுத்துவிட முடியுமா? வாக்குரிமை கூட ஐரோப்பாவில் இருந்து வந்தது தான். மக்களாட்சி முறை கூட ஐரோப்பாவை சேர்ந்ததுதான். இங்கு ராஜாக்களும், மகாராக்களும் தான் ஆண்டு கொண்டிருந்தனர். ஜனநாயகத்தையும் தூர எறிந்து விடலாமா? அலங்காரப் பதவியில் அமர்ந்து கொண்டு கண்டதையும் பேசக்கூடாது என அவர் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா எக்ஸ் பதிவில், நீங்க போட்டிருக்கிற பேண்ட் சர்ட் கோட் கூட ஐரோப்பா அயிட்டங்கள் தான் என பதிவிட்டுள்ளார்.