tamilnadu

img

மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி இல்லாத அரசு கட்டிடங்களை இனி கட்டக் கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு 

அரசு கட்டடங்களை மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதில், அனைத்து அரசு கட்டிடங்களும், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், அடுத்த 2 மாதங்களில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் இல்லாமல் எந்த அரசு கட்டடங்களும் இனி வருங்காலங்களில் கட்டக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இதுசம்பந்தமான சட்ட விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என பொதுப்பணித் துறைக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என கூறி, விசாரணையைச் செப்டம்பர் 1-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

;