tamilnadu

img

ஒன்றிய அரசு பணிகளில் அந்தந்த மாநிலத்தவர்க்கு முன்னுரிமை அளித்திடுக! வருமான வரி ஊழியர் சம்மேளன அகில இந்திய மாநாடு கோரிக்கை

சென்னை, செப். 27 - ஒன்றிய அரசு பணிகளில் அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வருமானவரி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.

வருமான வரி ஊழியர் சம்மேளனத்தின் 32 ஆவது அகில இந்திய மாநாடு செப்டம்பர் 20 - 24 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெற்றது. பொது மாநாட்டில் சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளர் தபன் சென், ஒன்றிய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  பொதுச்செயலாளர் எஸ்.பி.யாதவ் ஆகியோர் உரையாற்றினர்.

சங்கக்கொடியை ஏற்றி வைத்து பிரதிநிதிகள் மாநாட்டிற்கு சம்மேளன தலைவர் எம்.எஸ்.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநில முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் கே.எம். தீக்ஷித் தொடக்க உரையாற்றினார். தோழமை சங்கத் தலைவர்கள் வாழ்த்திப் பேசினர். மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ரவி அகர்வால் சிறப்புரையாற்றினார். சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ரூபக் சர்க்கார் நன்றி கூறினார்.

இந்த மாநாட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், 8 ஆவது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும், ஒன்றிய அரசு அலுவலகங்களில் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

மாநாட்டில் அகில இந்திய சம்மேளன தலைவராக எம்.எஸ்.வெங்கடேசன் (தமிழ்நாடு), பொதுச் செயலாளராக ரூபக் சர்க்கார் (மேற்கு வங்கம்), பொருளாளராக லக்ஷ்மன் ஏராம் (மும்பை) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழகத்திலிருந்து ஆர்.ஆர். ஷியாம்நாத் உதவிச் செயலாளராகவும், எம்.அர்ச்சனா அகில இந்திய பெண்கள் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

தமிழகத்தில் இருந்து சம்மேளன நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வியாழனன்று (செப்.26) சென்னை வருமான வரி அலுவலகத்தில் ஊழியர்கள் வரவேற்பளித்தனர்.