திருவொற்றியூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் மீண்டும் வாயுக் கசிவு ஏற்பட்டு 3 மாணவிகள் மயங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிக்குலேஷன் என்ற தனியார் பள்ளியில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி வாயுக்கசிவு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, பள்ளி நிர்வாகம் 10 நாட்கள் விடுமுறை அளித்தது.
இந்நிலையில் விடுமுறைக்குப் பின் தொடங்கிய முதல்நாளான இன்று காலை 3 மாணவிகள் வாயுக்கசிவால் மயங்கியுள்ளனர். இதனால் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
"விபத்து குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் பள்ளியை திறந்தது எப்படி? மீண்டும் வாயுக் கசிவு ஏற்பட்டால் யார் பொறுப்பு?" எனப் பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் பள்ளிக் கல்வித்துறை இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.