tamilnadu

img

பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம்..... பால் விலை குறைப்பு..... 5 கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் ஸ்டாலின்.....

சென்னை:
தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன், தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.பின்னர், தனது இருக்கையில் அமர்ந்து முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதும் தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார்கள்.

அவை தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பொது மக்களுக்கு உதவும் வகையிலும் அமைந்திருக்கின்றன. அதன் விவரம் வருமாறு:

கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, சுமார் 2 கோடியே 07 லட்சத்து 67 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணை யாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் முதலமைச்சர் கையொப்பமிட்டார்.

பால் விலை குறைப்பு
மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் மே 16 ஆம் தேதி முதல் குறைத்து விற்பனை செய்ய முதலமைச்சர் அரசாணை பிறப்பித்தார்.

பேருந்தில் இலவச பயணம்...
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் மே 8  முதல் பயணம் செய்யலாம்.இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்க ளுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகை யான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.

முதலமைச்சர் தேர்தல் பரப்புரையின் போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறுபிரச்சனைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டுதீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளார்.அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ‘உங்கள் தொகுதியில் முதல மைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தி ன்கீழ் ஏற்க முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.இதன்படி முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும்.முதலமைச்சரை தொடர்ந்து 33 அமைச்சர்களும் தலைமைச் செயலகத்தில் துறை வாரியாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.அதனைத் தொடர்ந்து, முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 4 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோருடன் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. 

;