tamilnadu

வருமான வரி பாக்கி செய்திக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு

சென்னை, மார்ச் 30 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமானவரித் துறை ரூ. 11 கோடி வரிப் பாக்கி நோட்டீஸ் கொடுத்தி ருப்பதாக அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்த நிலையில், அந்தச் செய்திக்கு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்  1951- பிரிவு 29 ஏ-ன்படி பதிவு செய்யப்பட்ட அரசியல்  கட்சியாகும். இதன் மூலம் வருமான வரிச் சட்டம் 13ஏ பிரிவுப் படி வரிவிலக்கு பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமை பெற்றுள்ளது. இதனை ஏற்று வருமான வரித்துறை வரிவிலக்கு வழங்கி இருக்க வேண்டும்.  அப்படி வரி விலக்கு கொடுக்கப்பட்டிருந்தால் கட்சிக்கு  வரிப்பாக்கியும் இல்லை, அதன் மீது அபராத வட்டி போட வேண்டிய அவசியமும் இல்லை. கட்சிக்கு வரு மான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற முறையீடு  ஏற்கெனவே தீர்வு காணப்படாமல் நிலுவையில் இருக்கி றது.

இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மாநில அலுவலகக் கட்டடம்  தொடர்பான கடன் தவணை, வாடகை வருமானம் மீது  ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட வரியினங்கள் அனைத்தையும் முறையாகவும் காலம் தவறாமலும் செலுத்தி வரு வதை மறைத்து, வருமான வரித்துறையின் நோட்டீஸ்  குறித்து பரப்பப்படும் செய்தி தேர்தல் ஆதாயம் தேடும்  குறுகிய பார்வை கொண்டது என்பதை பொதுமக்க ளும், வாக்காளர்களும் தெளிவாக உணர்ந்து கொள்  வார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.