சென்னை,டிச.18- வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழையின் காரண மாக திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையிலான சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் செய்துங்கநல்லூரில் சோதனை சாவடி அமைத்து வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங் களில் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித் துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யும் மாவட்டங் களுக்கு ரெட் அலர்ட், கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் மிதமான மழை பெய்யும் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்க ளில் பால் பவுடர், பதப்படுத்தப்பட்ட பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக பால் கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய அளவு பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.