தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் இருந்ததை விட மே மாதத்தில் கோடை மழை மற்றும் அசானி புயல் காரணமாக, வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருந்து வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான வானிலை நிலவுவதன் காரணமாக தமிழ்நாட்டில் கோடை மழை படிப் படியாக குறைந்து வருகிறது.
அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 8 ஆம் தேதிக்கு பிறகு நேற்று அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. 2 வாரங்களுக்கு பிறகு கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் புறநகரில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
தற்போது சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 104 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மேலும் சென்னையின் பல பகுதிகளில் 102 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.
திருச்சி, புதுச்சேரி, கரூர், வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரியை தொட்டுள்ளது. 28 ஆம் தேதி அக்னி வெயில் முடிவடைய உள்ள நிலையில் இன்னும் 4 நாட்களுக்கு வெயில் தொடரும் பின்னர் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், காற்றின் திசை மற்றும் வலு, காலநிலைக்கு ஏற்ப வெயிலின் தாக்கம் தொடர வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.