வெள்ளப்பெருக்கு: மாணவர்கள் பாதிப்பு
கள்ளக்குறிச்சி, ஜூன் 12 - சங்கராபுரம் அருகே உள்ள முஸ்குந்தா ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுவதால் பவுஞ்சிப்பட்டு, குமாரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பள்ளிக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பவுஞ்சிப்பட்டு, குமாரமங்கலம், காட்டுகொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக குமாரமங்கலம்-புதுப்பட்டு இடையே உள்ள முஸ்குந்தா ஆற்றைக் கடந்து சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழலில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக முஸ்குந்தா ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுவதால், பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் ஆபத்தை உணராமல் முஸ்குந்தா ஆற்றில் இறங்கி தண்ணீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி புதிதாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.