tamilnadu

img

பெண்ணுரிமைப் போராளியைத் தமிழகம் இழந்துவிட்டது... முதல்வர் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் இரங்கல்....

சென்னை:
போர்க்குணமும்  துணிச்சலும் நிரம்பிய ஒரு பெண்ணுரிமைப் போராளியைத் தமிழ்நாடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பறிகொடுத்திருப்பது பேரிழப்பாகும் என மைதிலி சிவராமன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் மாதர் சங்க அகில இந்தியத் துணைத் தலைவருமான மைதிலிசிவராமனின் திடீர் மறைவுச் செய்தி பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அளிக்கிறது. அவருடைய மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பெண்ணுரிமைப் போராளியான அவர் - முதலில் நியூயார்க் பட்ஜெட் டிவிஷனிலும், பிறகு ஐ.நா. மன்றத்திலும் உதவி ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுஉறுப்பினராக இருந்த மைதிலி சிவராமன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவராக இருந்து பெண்களின்முன்னேற்றத்திற்காகவும் - உரிமைகளுக்காகவும் அயராது குரல் கொடுத்து ஒரு புரட்சிப் பெண்ணாகத்திகழ்ந்தவர்.கீழவெண்மணி துயரத்தை - அந்த கிராமத்திற்கே நேரில் சென்று விசாரித்து - நீண்ட தொடர் கட்டுரை எழுதியவர். அவை “Haunted by Fire” என்ற புத்தகமாக வெளிவந்து - இன்றும் வரலாற்று ஆவணமாக இருக்கிறது.

தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளைத் தட்டிக் கேட்கப் போராடி - அம்மக்களுக்கு நீதி கிடைத்திட இரவு பகலாக உழைத்தவர். பெண்களுக்கு எதிராக எங்கு அநீதி நடைபெற்றாலும் - அங்கே வெகுண்டெழும் ஆவேசக் குரலாக மைதிலி சிவராமன் குரல்தான் இருக்கும்!போர்க்குணமும் துணிச்சலும் நிரம்பிய ஒரு பெண்ணுரிமைப் போராளியை தமிழ்நாடும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பறிகொடுத்திருப்பது பேரிழப்பாகும்.மைதிலி சிவராமனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும்- அவரோடு இணைந்து பணியாற்றிய மகளிருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் - அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான  ப.சிதம்பரம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திருமதி மைதிலி சிவராமன்அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு. அவர் அமெரிக்காவில் பணியாற்றிய காலத்தில் அவருடன் அறிமுகம் ஆனேன். மார்க்சிய கொள்கையில் அவர் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையும், பற்றும் என்னை பிரமிக்கச் செய்தது. அவர் தம் வாழ்நாள் முழுவதும் ஒரு போராளியாகவே வாழ்ந்தார். பல ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்தார். ஆனால் என்னுடைய நினைவில் அவருடைய போராளி பிம்பம் நிலைத்து நிற்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கும் மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

;