tamilnadu

img

அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து....

சென்னை:
தமிழ்நாட்டில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட  130 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த 2012 முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரைக்கும் அதிமுக ஆட்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது ஏராளமான அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.புதிதாக ஆட்சி பொறுப்பை ஏற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முந்தைய அதிமுக ஆட்சியின் பழிவாங்கும் நடவடிக்கைகளையும் ரத்து செய்து வருகிறார். பத்திரிகையாளர்கள், பத்திரிகை நிறுவனங்கள் மீது கடந்த ஆட்சியில் போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து வியாழனன்று (ஜூலை29) உத்தரவிட்டார்.இந்த நிலையில், வெள்ளியன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவதூறு பேச்சுக்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்த், திமுக மகளிர் அணி செயலாளர் கருணாநிதி கனிமொழி, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான இ.வி.கே.எஸ். இளங்கோவன், விஜயதாரனி, பழ.கருப்பையா, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, தயாநிதிமாறன், நாஞ்சில் சம்பத், எஸ்.எம். நாசர், எஸ்.ஆர். பார்த்திபன், அறப்போர் ஜெயராம் வெங்கடேசன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் கணேசன் ஆகியோர் மீது சுமார் 130 வழக்குகள் போடப்பட்டிருந்தன.

அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவின் மூலம், ஆளுநர் உரை மீதான விவாத்தின்போது சட்டமன்றத்தில் அளித்த வாக்குறுதியை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.

;