ஜக்கி வாசுதேவ்காவிரி அழைப்பு திட்டத்தை அரசின் திட்டமாக முன் வைத்து ரூ.10626 கோடி பணம் வசூலித்தாரா ? என்ற விசாரணை தேவைப்படலாம் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
`காவிரி அழைக்கிறது' என்ற திட்டத்தின் பெயரில் ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தலைக்காவிரி முதல் திருவாரூர் வரை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தார். ஜக்கி வாசுதேவ் சென்ற பாதையில் அதாவது, 639 கி.மீட்டர் தொலைவுக்கு கோடிக்கணக்கான மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஒரு மரம் நடுவதற்கு மக்கள் ரூ.42 நன்கொடை தரலாம் என்று ஈஷா மையம் அறிவித்திருந்தது.
இதையடுத்து காவேரி அழைக்கிறது என்ற பெயரில் பொதுமக்களிடம் ஜக்கி வாசுதேவ் சுமார் ரூ.10,626/- கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக அரசின் திட்டம் போல் கட்டமைத்து பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று கர்நாடக உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி அபெய் ஸ்ரீநிவாஸ் ஓகா மற்றும் நீதிபதி எஸ்.எஸ் மகதம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது . அப்போது கர்நாடக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில் காவிரி அழைக்கிறது என்ற திட்டம் ஈஷா யோகா மையத்தின் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசின் திட்டம் இல்லை. அதேபோல் இந்த திட்டத்தின் கீழ் வைக்கப்படும் மரங்கள் விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தில் வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசுககு சொந்தமான இடங்களில் மரங்கள் நடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கர்நாடக அரசின் பதில் திருப்தியளிக்கவில்லை. இது இணையதளத்தில் முக்கியமானதாக சித்தரிக்கப்படவில்லை. ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளை "காவிரி அழைப்பு" திட்டத்தை அரசாங்க முயற்சியாக முன்வைத்து பொதுமக்களிடமிருந்து நிதி சேகரித்ததா இல்லையா என்பதை அறிய விசாரணை தேவைப்படலாம் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தது.
மேலும் இந்த வழக்கை மார்ச் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.