tamilnadu

img

கடனை செலுத்த அவகாசம் கோரி கால் டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம்...

சென்னை:
கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காலத்தில் வாகனங்கள் இயங்கவில்லை. இதனால் இயல்புநிலை திரும்பும் வரை நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கால்டாக்சி ஓட்டுநர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, சாலை போக்குவரத்து சம்மேளனம் சார்பில் ஜூன் 24 வியாழனன்று  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் பொது பயன்பட்டிற்காக பெரும்பாலான வாடகை வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை நகரில் மட்டும் சுமார் 30 ஆயிரம் கால் டாக்சிகள் இயங்குகின்றன. 2020 நவம்பருக்கு பின் வாகனங்கள் ஓடத் துவங்கினாலும் முழுமையாக பயணிகளு டன் இயங்கவில்லை. ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட கடன் தொகைக்கு கூடுதல் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு கடன் தவணையும் அதிகப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் 2021 மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படவில்லை.இந்த சூழ்நிலையில், நிதி நிறுவனங்கள் மாதாந்திரத் தவணை செலுத்துவதற்கு நிர்ப்பந்திக்கின்றன. மாதாந்திரத் தவணை செலுத்த தவறினால் வாகனங்களை பறிமுதல்செய்கின்றனர். இது இத்தொழிலை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகும். எனவே வேலைவாய்ப்பற்ற நிலையில் சுயதொழிலாக இத்தொழிலை செய்துவரும் பல்லாயிரக்கணக்கானோரின் தொழிலையும், குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். கடந்த 2020ஆம் ஆண்டு தவணை செலுத்துவதற்கு ஆறு மாத காலத்திற்கு விதிவிலக்கு அளித்தது போல, தற்போதும் விதிவிலக்கு அளிப்பதுதான் ஒரே தீர்வாகும்.எனவே ஒன்றிய அரசும், ரிசர்வ் வங்கியும்வாகனங்களுக்கு மாதாந்திர தவணைத் தொகையை செலுத்துவதை தள்ளி வைக்க நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு சிஐடியு மாநிலஉதவித்தலைவர் பி.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இயல்புநிலை திரும்பும்வரை விலக்கு அளித்திடுக!
தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளனத் தலைவர் கே.ஆறுமுகநயினார் போராட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கடன் நிறுவனங்களிடம் நிதிபெற்று சிறிய மூலதனத்துடன் சுயதொழில் என்கிற பெயரில் கால் டாக்சி தொழில் செய்து வருகின்றனர். சம்பாதிக்கும் தொகையில் சுமார் 60 விழுக்காடு இஎம்ஐ செலுத்த வேண்டியுள்ளது. கொரோனா முதல் அலையில் போடப்பட்ட பொதுமுடக்கத்தில் பாதிக்கப்பட்ட கால்டாக்சி ஓட்டுநர்களுக்கு ஒன்றிய அரசு கடன் தவணைகளை செலுத்த 6 மாதகாலம் அவகாசம் அளித்தது. ஆனால்அதனை நிதிநிறுவனங்கள் ஏற்க மறுத்து விட்டன.மேலும் தவணை காலத்திற்கு வட்டியுடன் கடன்தொகையை வசூலிக்கவும் செய்தன. ஏற்கனவே இந்த தொழில் முடங்கியுள்ள சூழலில் தவணைத் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும் என நிதி நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி வருகின்றன. சில நிறுவனங்கள் அபராதத்துடன் தவணையை செலுத்த முடியாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யும் அவலமும் நடந்து வருகிறது.எனவே இயல்புநிலை திரும்பும் வரை தவணைசெலுத்த விலக்கு அளிக்க வேண்டும் எனவலியுறுத்தி ஒன்றிய நிதி அமைச்சர், பிரதமர்,முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.லாரி, ஆட்டோ, டூரிஸ்ட் வாகனங்கள் உள்ளிட்ட சுமார் 20 லட்சம் வாகனங்கள் கடன் பெற்றுத்தான் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. தொழிலாளர்களுக்கு எதிராக ஒன்றிய அரசின் மற்றும் நிதி நிறுவனங்களின் நடவடிக்கை தொடருமேயானால் தமிழகத்தில் 1 கோடியே 25 லட்சம் பேரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.தமிழ்நாடு முதலமைச்சர்  ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தின் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், சுங்கச்சாவடி வசூல் என்கிற பெயரில் கொள்ளையடிக்கும் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சாலை போக்குவரத்து சம்மேளன பொருளாளர் வி.குப்புசாமி, கால்டாக்சி  மாநிலச் செயலாளர் பூபதி, உரிமைக்குரல் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜாகீர்உசேன், வாழ்வுரிமை சங்கம் மாநிலச்செய லாளர் ராமானுஜம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ரிசர்வ் வங்கி உயரதிகாரியிட மும், முதலமைச்சர் தனிப்பிரிவிலும் மனு அளிக்கப்பட்டது. 

;