இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தா. பாண்டியன் உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழவெள்ளை மலைப்பட்டியில் 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 25 தேதி பிறந்தவர் தா. பாண்டியன். 1953ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த தா.பாண்டியன் 68 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வந்தார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பயின்று அதே கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வந்தார். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தார். 1989ல் எஸ்.ஏ டாங்கே உடன் இணைந்து ஐக்கிய பொதுவுடைமை கட்சியை தொடங்கி அதன் பொதுச்செயலாளராக பணியாற்றினார்.16 ஆண்டுகாலம் கம்யூனிஸ்ட் கட்சியின் இதழான ஜனசக்தியின் ஆசிரியராக பணியாற்றியவர்
மேலும் 1989, மற்றும் 1992 என இரண்டு முறை வடசென்னை மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 8நூல்களை எழுதியதுடன் 6 நூல்களை மொழி பெயர்த்துள்ளார்.
தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் வயது முதிர்ச்சி காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும் தா.பாண்டியனுக்கு சிறுநீரக பிரச்சினை, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் இருந்ததால், அவரின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலே இருந்து வந்தது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று தா.பாண்டியன் உடல் நிலை குறித்து கேட்டறிந்ததோடு, அவருக்கு உரிய சிகிச்சை வழங்குமாறும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.