tamilnadu

img

செங்கொடி இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின்  பொதுச் செயலாளர், செங்கொடி இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 72.  சமீப நாட்களாக நுரையீரல் பாதிப்புக்காக புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் செப்டம்பர் 12 வியாழன் மாலை 3.03 மணி அளவில் மரணமடைந்தார்.

தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவுச் செய்தியால் மீளாத் துயரத்தை வெளிப்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 
தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை :

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின்  பொதுச் செயலாளர், செங்கொடி இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவு மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

1952ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் தோழர் யெச்சூரி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயரிய தலைவராகவும், இடதுசாரி இயக்கத்தின் தனித்திறன் படைத்த தலைவராகவும் உலகறிந்த மார்க்சிய தத்துவ அறிஞராகவும் விளங்கினார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதன் தொடர்ச்சியாக இந்திய மாணவர் சங்கத்தை பல ஆண்டுகள் வழிநடத்தி அகில இந்திய அளவில் சக்திமிக்க அமைப்பாக மாற்றியதில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. 1975ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்ட தோழர் சீத்தாராம் யெச்சூரி தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக அவசர நிலை காலத்தில் கைது செய்யப்பட்டவர். 1985ம் ஆண்டு முதல் மத்தியக்குழு உறுப்பினராகவும் 1992ம் ஆண்டு முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும், 2015 முதல் பொதுச் செயலாளராகவும் செயலாற்றியவர். பல உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களோடு நெருக்கமாக பழகியவர். கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடுகளில் கலந்து கொண்டு இன்றைய சூழ்நிலையில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னுள்ள கடமைகளை அழுத்தமாக வலியுறுத்தியவர்.

கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளை உருவாக்குவதிலும், செயல்படுத்துவதிலும் கடந்த 30 ஆண்டு காலமாக தனது முழு பங்களிப்பையும் செய்தவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி. குறிப்பாக, தத்துவார்த்த தளத்திலும், மதச்சார்பற்ற பன்முகத் தன்மை கொண்ட கூட்டாட்சி இந்தியாவை பாதுகாக்க வேண்டும் என்பதிலும் முனைப்பு காட்டியவர். இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் அவருடைய பங்களிப்பு மகத்தானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் ஆசிரியராக செயலாற்றியுள்ளார். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இந்துத்துவாவை எதிர்த்த போராட்டத்தில் கூடுதலான பங்களிப்பு செய்தவர். இந்து ராஷ்டிரம் என்பது என்ன? மதவெறியும், மதச்சார்பின்மையும் ஆகிய புத்தகங்கள் முக்கியமான பங்களிப்புகளாகும். இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர். மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்தார். ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கங்களை உருவாக்கும் முயற்சியில் முக்கிய பங்களிப்பு செய்தவர். தனது பல்வேறு பங்களிப்புகள் மூலம் பலதுறையினரோடும் உறவுகளை வளர்த்துக் கொண்டவர்.

தமிழ்நாட்டில் வழிகாட்டியாய்...

தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பதோடு தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்துவதில் பல்வேறு தருணங்களில் உதவி செய்தவர். தமிழகத்தில் நடைபெற்ற பல தேர்தல் பிரச்சாரங்களிலும் கலந்து கொண்டு பங்காற்றியவர். கட்சியின் மாநில மாநாடுகள், பல்வேறு அரசியல் சிறப்பு மாநாடுகளில் பங்கு கொண்டு உரையாற்றியவர்.

தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும், மதச்சார்பற்ற இயக்கங்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். இந்தியா ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் காலத்தில் இந்த இழப்பு இந்தியாவின் ஜனநாயக பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு பேரிழப்பாகும்.

கட்சி நிகழ்ச்சிகள் ரத்து

செங்கொடியின் மகத்தான புதல்வர் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. கட்சிக் கொடியினை ஒருவார காலத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்க விட்டு மரியாதை செலுத்துமாறும், மூன்று நாட்களுக்கு கட்சி நிகழ்ச்சிகளை ரத்து செய்யுமாறும் கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. 

மாநிலக்குழு அலுவலகத்தில் அஞ்சலி!

தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவிற்கு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ப. செல்வசிங், என். குணசேகரன், க. கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ. ஆறுமுகநயினார், ப சுந்தராஜன், வெ. ராஜசேகரன், ஆர். பத்ரி, இரா. சிந்தன், ஆர். சுதிர், கோபிக்குமார், மற்றும் தோழர் பி. ராமமூர்த்தி அவர்களின் புதல்வியர் பொன்னி, வழக்கறிஞர் ஆர். வைகை மற்றும் அலுவலக தோழர்கள் கலந்து கொண்டனர்.

நாளை இறுதி நிகழ்வு

தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர் களின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக 14.09.2024 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை புதுதில்லியில் கட்சி யின் மத்தியக்குழு அலுவலகத்தில் வைக்கப்படும். மாலை 3 மணிக்கு மேல் அவரது விருப்பத்தின் படியே அவரது உடல் தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு, மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்படும்.