tamilnadu

img

சிபிஎம் மூத்த முன்னோடி தோழர் மைதிலி சிவராமன் காலமானார்.... சிபிஎம் மாநிலச் செயற்குழு செவ்வஞ்சலி ....

 சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடிகளில்  ஒருவரான தோழர் மைதிலி சிவராமன் உடல்நலக் குறைவு காரணமாக மே 30 ஞாயிறன்று காலமானார். அவருக்கு வயது 81. 

மாநிலக்குழு அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்ச்சி 
தோழர் மைதிலி சிவராமன் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மே 30 ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தமிழ்நாடு மாநிலக்குழு அலு வலகத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பா. ஜான்சிராணி, ஆகியோர் அஞ்சலி உரை நிகழ்த்தி மரியாதை  செலுத்தினர். மாநிலக்குழு தோழர்கள் ஐ. ஆறுமுகநயினார், வெ. ராஜசேகரன் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

தோழர் மைதிலி சிவராமன் உடல் தகனம் 
மயிலாப்பூரில் உள்ள அவரதுஇல்லத்தில் இருந்து பெசன்ட் நகர் மயானத்திற்கு தோழர் மைதிலிசிவராமன் உடல் கொண்டு வரப்பட்து.  கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தர்ராமன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஆர். வேல்முருகன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்கள் ம.சித்ரகலா (தென் சென்னை), வி.தனலட்சுமி (மத்திய சென்னை), சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எச்.வசந்தி, தமிழ்நாடுஅறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் உதயன், வழக்கறிஞர் சம்கிராஜ், பேராசிரியர்கள் வீ.அரசு,  அ.மங்கை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இரங்கல்
தோழர் மைதிலி சிவராமன் மறைவிற்கு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா, பொதுச் யலாளர் சீத்தாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா, தேசிய மாதர் சம்மேளனபொதுச் செயலாளர் ஆனி ராஜா,கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், பி.சம்பத், அ.சவுந்தரராசன், உ.வாசுகி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான தோழர் மைதிலி சிவராமன் மே 30 ஞாயிறன்று காலமானார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு செவ்வஞ்சலி செலுத்தியுள்ளது. 

சிபிஎம் மாநிலச் செயற்குழு  இரங்கல்
கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், தொழிற்சங்க, பெண்கள் இயக்கத் தலைவருமான தோழர் மைதிலி சிவராமன் (வயது 81) கொரோனா தொற்றால் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தனதுஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வ தோடு அவருக்கு செவ்வஞ்சலியையும் செலுத்துகிறது.

தோழர் மைதிலி சிவராமன் அமெரிக்கா வில் உள்ள சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, பிறகு நியூயார்க் மாநில அரசின் நிதித்துறையில் ஓராண்டு வேலை செய்தார். 1966 ஆம் ஆண்டு ஐ.நா. மன்றத்தில் மூன்றாம் உலக நாடுகளைப் பற்றி இந்திய அரசுக்கு அறிக்கையளிக்கும் பணியில் சேர்ந்தார். அமெரிக்காவில் இருந்தபோது (தலைமறைவாக) கியூபா சென்று வந்தார். 1960-களில் அவர் அமெரிக்காவில் இருந்தபோது  வியட்நாம் போருக்கு எதிராக நிகழ்ந்த மாணவர் போராட்டங்கள், கறுப்பின மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்கள் அவரின் கவனத்தை ஈர்த்தன. வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் உணர்வின் மூலம் மார்க்சியத்தின் பக்கம் திரும்பினார். அமெரிக்க அரசு வேலையை உதறிவிட்டு இந்தியாவிற்கு திரும்பினார். ரேடிக்கல் ரெவியூ என்ற பத்திரிகையை என். ராம், ப. சிதம்பரம் ஆகியோருடன் இணைந்து நடத்தி வந்தார். 

கீழவெண்மணி கொடூரத்தை உலக அரங்கில் வெளிக்கொணர்ந்தவர்
1968 ஆம் ஆண்டு கீழவெண்மணியில் 44 விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது. ரேடிக்கல் ரெவ்யூ  பத்திரிகையில் ஆவணப்படுத்தி இக்கொடூரச் சம்பவத்தை உலகிற்கு வெளிக்கொணர்ந்த முதலாவது நபர் தோழர் மைதிலி சிவராமன் ஆவார். கீழவெண்மணிப் படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கணபதியாப்பிள்ளை கமிஷனுக்குப் பல்வேறு ஆவணங்களைத் திரட்டியும் தந்தவர். இது குறித்து ‘ Haunted by Fire’ என்கிற புத்தகம் எழுதியிருக்கிறார்.
தோழர் மைதிலி போர்க்குணமிக்க தொழிற்சங்கத் தலைவராகவும் பரிணமித்து சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர். சி.ஐ.டி.யு அமைப்பின் மாநிலப் பொறுப்புகளையும் வகித்தவர்.

கல்லுடைக்கும் தொழிலாளர் போராட்டம், டேப்ளட் தொழிலாளர் போராட்டம், டன்லப் தொழிற்சங்கம், பொன்வண்டு சோப் கம்பெனி,  பாலு கார்மெண்ட்ஸ், குவாரி  தொழிற்சங்கம் என பல தொழிற்சங்கங்களில் தொழிலாளிகளின் உரிமைகளுக்காக போராடியவர். குறிப்பாக கார்மெண்ட் தொழில்களில் பெண்கள் மீது தொடுக்கப்படும் பொருளாதார சுரண்டலையும், பாலியல் தாக்குதல்களையும் வலுவான முறையில் தலையிட்டு சட்டரீதியாகவும் தடுத்து நிறுத்திய பெரும் பங்கு தோழர் மைதிலி சிவராமனுக்கு உண்டு. சிறு நிறுவனங்களில் மட்டுமின்றி மெட்டல்பாக்ஸ், அசோக் லேலண்டு, யூனியன் கார்பைடு, டிவிஎஸ் உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் நடந்த தொழிற்சங்கப் போராட்டங்களிலும் முக்கிய பங்கு வகித்தவர் தோழர் மைதிலி . உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவை தமிழகத்தில் உருவாக்கி வளர்த்ததில் முக்கியப் பங்காற்றியவர். மத்தியதர வர்க்க பெண் ஊழியர்களை தொழிற்சங்கத்திலும், மாதர் இயக்கத்திலும் ஸ்தாபனப்படுத்துவதில் வழிகாட்டியாக திகழ்ந்தவர்.

1973-ல் பாப்பா உமாநாத், கே.பி.ஜானகியம்மாள் ஆகியோரோடு இணைந்து தமிழக ஜனநாயக மாதர் சங்கத்தைக் கட்டியெழுப்பிய ஸ்தாபகர்களில் ஒருவர் தோழர் மைதிலி சிவராமன். வரதட்சணை கொலைகள், தற்கொலை என மூடி மறைக்கப்பட்ட நிலைமை, காவல் நிலையங்களில் ஆண் குற்றவாளிகளை பிடிப்பதற்காக பெண்களை பணயக் கைதியாக வைத்த போக்கு, குழந்தை தொழிலாளர்கள்,  பெண்சிசுக்கொலை, சாதிய ஒடுக்குமுறை, குழந்தைத் திருமணம், இடஒதுக்கீடு என ஒவ்வொரு பகுதி பிரச்சனைகளையும் ஆய்வுக்குள்ளாக்கி போராட்டங்களை முன்னெடுத்தவர். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் சென்னை நடுகுப்பத்தில் மீனவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து உண்மை அறியும் குழுவாகச் சென்று விவரங்களை வெளிக்கொண்டு வந்தவர். பிரேமானந்தா வழக்கு, வாச்சாத்தி வழக்கு எனப் பெண்களுக்கு எதிரான பல பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கமிருந்து சட்டப் போராட்டம் நடத்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க அரும்பாடுபட்ட தலைவர். 

தோழர் மைதிலி தமிழக பெண் விடுதலைப் போராளிகளில் முன்வரிசையில் நின்றவர். பன்முகத் திறன் கொண்டவர். மாதர் இயக்கத்தின் தத்துவார்த்தப் பின் புலனை ஊழியர்கள் மத்தியில் பயிற்றுவித்தவர். தனது உணர்வுப்பூர்வமான எழுத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் இடதுசாரி சிந்தனைகளை விதைத்தவர். சாதியம், பெண்ணியம்,மதவாதம், மாறிவரும் அரசியல் சமூகச் சூழல் ஆகியவை குறித்து பயிற்று விப்பதில் முன்நின்றவர். பல அரசியல் வகுப்புகள், குறிப்பாக ‘மார்க்சிய பார்வையில்பெண்ணியம்’ குறித்த வகுப்பினை பரவலாக நடத்தியவர். சாதி எதிர்ப்புப் போராட்டத்தையும் பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தோடு இணைத்துச் சென்றவர்.

எமர்ஜென்சி காலத்தில் தோழர் ஹரிபட் சிறையிலும், தோழர்கள் வி.பி.சிந்தன்,பி.ஆர். பரமேஸ்வரன், வி.மீனாட்சிசுந்தரம், அ.சவுந்தரராசன் போன்ற தலைவர்கள் தலைமறைவாகவும் இருந்த காலத்தில் காவல்துறையின் எத்தனையோ நெருக்கடிக்கு மத்தியில் மாதர் சங்கத்தை வழி நடத்தியதோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி, சிஐடியு பணிகளையும் அர்ப்பணிப்போடு நிறைவேற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றியவர். மகளிர் சிந்தனை ஆசிரியராகவும் பணியாற்றியவர். வர்க்கம் மற்றும் பாலின பிரச்சனைகள் குறித்த ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும், சிறு பிரசுரங்களையும் எழுதியவர். எண்ணற்ற பெண் தோழர்களையும் கட்சிக்குள் கொண்டு வந்தவர். அவரால் முழு நேர ஊழியராக்கப்பட்ட பல பெண் தோழர்கள் உள்ளனர். தான் ஏற்றுக் கொண்ட இடதுசாரி கொள்கையை தனது இறுதி மூச்சு வரை கடைபிடித்தவர்.

சில ஆண்டுகளாக ‘அல்சைமர்’ என்ற தீவிர ஞாபகமறதி  நோயால் பாதிக்கப்பட்டு அவரது கணவர் கருணாகரன், மகள் கல்பனா, மருமகன் பாலாஜி ஆகியோர் கவனிப்பில் தோழர் மைதிலி இருந்தார்.தோழர் மைதிலி அவர்களின் மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், பெண்கள்இயக்கத்திற்கும், தொழிற்சங்க இயக்கத்திற்கும், அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தனது வீரவணக்கத்தையும், புகழஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது கணவர் தோழர் கருணாகரன் அவர்களுக்கும், மகள் கல்பனா, மருமகன்பாலாஜி ஆகியோருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 குறிப்பு  : இந்த செய்தி தொகுப்பு 1 மற்றும் 3 என இரண்டு பக்கமாக பிரிக்கப்பட்டுள்ளது.. தோழர்கள் தொடர்ந்து படிக்கும் வசதிக்காக தொடர்ச்சிகள் அனைத்தும் ஒரே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.    

;