tamilnadu

img

விவசாயிகள் மீது மோடி அரசு கண்மூடித்தனமான தாக்குதல் - சிபிஎம் கண்டனம்

தில்லியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது மோடி அரசு கண்மூடித்தனமான தாக்குதல்
நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து
கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது

மத்திய அரசு பிறப்பித்த விவசாயிகளுக்கு விரோதமான மூன்று மத்திய
சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென 62 நாட்களுக்கும் மேலாக
லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல்
அமைதியான முறையில் போராடி வருகிறார்கள். இதுவரை ஒரு சிறு
வன்முறையோ, அசம்பாவிதமோ அங்கு நடைபெறவில்லை. தங்களை தாக்கிய
காவல்துறையினருக்கு கூட விவசாயிகள் உணவு வழங்கும் காட்சியை நாடே
பார்த்தது.
தங்களது கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க தயார் இல்லாத நிலையில்
குடியரசுத் தினத்தன்று டில்லியில் டிராக்டர் பேரணி நடத்துவது என விவசாயிகள்
கூட்டமைப்பு அறிவித்தது. அந்த பேரணியை முடக்குவதற்கு பகீரத முயற்சியை
மோடி அரசு மேற்கொண்டது. உச்சநீதிமன்றத்தில் மனு போட்டு பேரணியை தடை
செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தது. ஆனால், உச்சநீதிமன்றம்
காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. இன்று (26.1.2021)
அமைதியான முறையில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது மத்திய
காவல்படையினர் கண்மூடித்தனமான தாக்குதலை தொடுத்துள்ளனர். ஒரு
விவசாயி மரணமடைந்துள்ளார். பல நூறு விவசாயிகள் படுகாயம் அடைந்து
டில்லி நகர வீதிகளில் விவசாயிகள் ரத்தம் சிந்தியுள்ளனர். அமைதியாக போராடி
வரும் விவசாயிகளை தீவிரவாதிகள் என முத்திரைக் குத்தி, விவசாயிகள் மீது
தாக்குதல் நடத்தியிருக்கிற மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்
கொள்கிறது.

மத்திய அரசின் இந்த அராஜகப் போக்கினை கண்டித்து, தமிழகத்தில் உள்ள
அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் கண்டனக் குரல் எழுப்ப
முன்வர வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
கண்டன இயக்கம் நடத்த முன்வரும் அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உடனடியாக கண்டன
இயக்கங்களை நடத்திட கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக்
கொள்கிறது.

;