tamilnadu

தொடர் மின்வெட்டு: மக்கள் அவதி

கும்மிடிப்பூண்டி, மே 7- கும்மிடிப்பூண்டி பஜாரில் துணை மின்நிலையம் உள்ளது. இதன் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 4ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அறிவிக்கப்பட்ட மின்தடை ஏற்பட்டது. ஆனால், பராமரிப்பு பணி முடிவடைந்த நிலையிலும் கடந்த 2 நாட்களாக கும்மிடிப்பூண்டியில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு நிலவுகிறது.திங்களன்று மதியம் ஒரு மணிக்கு ஏற்பட்ட மின்தடை இரவு 8.30 மணிக்குதான் சீரானது. இந்த அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டால் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து பொது மக்களும், வியாபாரிகளும் கும்மிடிப்பூண்டி துணை மின்நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தனர். ஆனால், மின்தடை ஏற்பட்டது தொடர்பாக எந்த பகுதியில் எப்படி பழுது ஏற்பட்டது? என்பதை எங்களால் கண்டறிய முடியவில்லை என்று மின்துறை அதிகாரிகள் பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டியில் மட்டும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.