tamilnadu

img

தோழர் கல்யாணசுந்தரம் காலமானார்

தோழர் கல்யாணசுந்தரம்  உடல் தகனம்

சென்னை, ஆக. 21 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்ட  முன்னாள் அலுவலக செயலாளர் தோழர் மோகன்  (எ) கல்யாண சுந்தரம் உடல் புதனன்று (ஆக.21)  குரோம்பேட்டை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இ.முத்துக்குமார், சாமிநடராஜன், கே.பி.பெருமாள், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல் முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.தாமு, ஜி.விஜயலட்சுமி எம்.சி., உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

வெளிநாடு கல்வி நிறுவனங்களை  தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை!

தமிழக மாணவர்களுக்கு வேண்டுகோள் 

சென்னை, ஆக. 21- “வெளிநாடுகளில் தேர்ந்தெடுக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த உண்மைத் தன்மையை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என இன்டர்நேஷனல் எஜுகேஷன் குரூப் நிர்வாக இயக்குநர் மோஹித் கம்பீர் கேட்டுக்கொண்டுள்ளார்.  சென்னையில் ஆக்ஸ்போர்டு இன்டர்நேஷனல் எஜுகேஷன் குரூப் சார்பில்  இங்கிலாந்தில் உயர்கல்வி மேற்கொள் வதற்கான ‘பாத் வே’ திட்டம் குறித்து விளக்கப்பட்டது.  இக்கூட்டத்தில்  பேசிய மோஹித் கம்பீர்  “தமிழ்நாடு மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி தொடர விரும்பு கின்றனர். ஆனால் முறையான அணுகு முறை இல்லாததால், அவர்களின் விருப்பம்  நிறைவேறுவது இல்லை. வெளிநாடுகளில் உயர்கல்வி தொடர விரும்பும் மாணவர்கள்  விழிப்புடன் இருக்க வேண்டும். மாணவர்கள்  தேர்ந்தெடுக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த உண்மைத் தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடம் பேசி கல்வியின் தரத்தை உறுதி செய்து கொள்ளவேண்டும். பெரும்பாலும் இந்திய மாணவர்கள், வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் பிஸினஸ் மேனேஜ்மண்ட், கம்பியூட்டர் சயின்ஸ்,பொறியியல் பாட பிரிவுகளை பயில  விரும்புகின்றனர். “பாத் வே” திட்டம் என்பது  12 மாத பயிற்சி வகுப்பு ஆகும். இங்கி லாந்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் வகையிலும், ஆங்கில மொழியில் அறிவு பெறும் வகையிலும் பயிற்சிகள் வழங்கப்படும். இந்திய கல்வி முறையை அங்கீகரிக் காத ஐரோப்பிய கல்வி நிறுவனங்கள் கூட “பாத் வே” திட்டம் மூலம் வழங்கப்படும் பயிற்சியை அங்கீகரித்து உள்ளது என்றார் அவர் . மேலும் தகவல் அறிய https://www.oxfordinternationaleducationgroup.com/education-services/ இந்த இணைய தளங்களை பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சக்சஸ் பாயிண்ட் தலைமை நிர்வாக இயக்குநர் ராஜதுரை  துரைசாமி, “5 ஆண்டுகளாக ஆக்ஸ்ஃபோர்டு  குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகி றோம். 13 முதல் 18 லட்சம் வரை கல்லூரி  படிப்புக்கும் மட்டும் செலவாகும். பாத்வே மூலம் செல்லும் மாணவர்களுக்கு கூடுதலாக  ரூ.8 லட்சம் வரை செலவாகும் என்றார்.

7 பேரிடம் ரூ. 36 லட்சம் மோசடி நாம் தமிழர்கட்சி நிர்வாகி மீது மேலும் ஒரு புகார்

கிருஷ்ணகிரி, ஆக.21-  பர்கூர் வட்டம் கந்திகுப்பம் தனியார் பள்ளியில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் 13 பேருக்கு பாலியல் கொடுமைகள் நடந்துள்ளது.  இதற்கு முக்கிய காரணமான நாம் தமிழர் கட்சி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன் உட்பட 11 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான சிவராமன் தன்னை வழக்கறிஞர் என அடையாளப்படுத்திக் கொண்டு நில பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி 7 பேரிடம் ரூ. 36.20 லட்சம் பணத்தை வசூல் செய்தும், போலியாக நீதிமன்ற உத்தரவை தயார் செய்தும், நீதிமன்றத்தின் பெயரில் வங்கி கணக்கு இருப்பதாகவும் கூறியும் தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மேலும் அவர் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மரணமடைந்த மகளின் உடலை மீட்டுத்தர கோரிக்கை

கடலூர், ஆக.21- அமெரிக்காவில் மரணமடைந்த மகள் உடலையும், பேரப்பிள்ளைகளையும் மீட்டுத்தரக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் கள் மனு அளித்தனர். கடலூர் முதுநகர் சிப்பாய் தெருவை சேர்ந்த மாணிக்கவாசகம்-லதா தம்பதி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். எனது மகள் சௌமியா அவருக்கும் புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. மூன்று பிள்ளைகளுடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். சௌமியாவை அவரது கணவர் பாலசுப்ரமணியம் சுட்டுக் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டதாக  எங்களது குடும்ப நண்பர் வினோத் பவர் தொலைபேசி வாயிலாக தெரிவித்தார். இறந்த தனது மகளையும் பேரக்குழந்தைகள் மூன்று பேரையும் மீட்டு இந்தியா கொண்டு வர  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சௌமியாவின் பெற்றோர் மனு அளித்தனர். 

ஆற்றில் குளிக்க சென்ற சிறுவர்கள் பலி 

திருவண்ணாமலை,ஆக.21- செங்கம் அடுத்த, ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் - நந்தினி தம்பதிகளின் மகன் கதிரேஸ்வரர் (5),  அகலீஸ்வரன் (4) இருவரும் குப்பநத்தம் அணை அருகே செய்யாற்றில் குளிக்க சென்றபோது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பலியாகினர். இந்நிலையில் (ஆக.21 )ஒரு சிறுவன் சடலம் கரை ஒதுங்கியது. காவல்துறையினர் மீட்டு,  உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஒரு  சிறுவன்  சடலத்தை தேடி வருகின்றனர்.