tamilnadu

img

குழந்தைத் திருமணம்: அமைச்சர் கடும் எச்சரிக்கை....

சென்னை:
குழந்தைத் திருமணத்தை நடத்துபவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள், குழந்தைத் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் கோவிட்-19 இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் குழந்தைகள் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித் துள்ளன.40 விழுக்காடு வரை குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நேரத்தில் சிலர் குழந்தைகள் திருமணத்தை நடத்துகின்றனர். இதைத் தடுப்பது குறித்து சமூக நலத்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்களன்று நடந்தது.பின்னர் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

“கோவிட்-19 இரண்டாம் அலையின் தாக்கத்தின் காரணமாக குழந்தைத் திருமணங்கள் நடைபெறாமல் தடுத்திடவும் தீவிரமாகக் கண்காணிக்கவும்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அனைத்து மாவட்ட சமூக நல அலுவலர்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சைல்டு லைன் 1098 அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் அதுகுறித்துப் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து சமூக பாதுகாப்புத் துறையும், சமூக நலத்துறையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கீதாஜீவன், குழந்தைகள் திருமணம் மற்றும் அந்தக் குழந்தைகள் திருமணத்தில் கலந்து கொள்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.குழந்தைத் திருமணத்தை நடத்துபவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள், இத்தகைய குழந்தைத் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் எனவும் எச்சரித்தார்.இக்கூட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் முதன்மைச் செயலாளர் சம்பு கல்லோலிகர், சமூக நல ஆணையர் ஆபிரகாம், சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வேனா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் கவிதாராமு மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்”.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

;