tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

போதையில் விபத்து ஏற்படுத்திய  தலைமை காவலர் தீக்குளித்து தற்கொலை

சென்னை, மே 21-  சென்னை, பெருங்குடி பகுதியை சேர்ந்த முருகேசன் செவ்வாயன்று (மே 20) கிண்டி அருகே மடுவன்கரை மேம்பாலத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.  அதே வழியாக மது போதையில் காரில் வந்த தரமணி காவல் நிலைய தலைமைக் காவலர் செந்தில் குமார் திடீரென முருகேசனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் படுகாயம் அடைந்தார். ஆனால் விபத்து ஏற்படுத்திய தலைமைக்காவலர் செந்தில்குமார் காரை நிறுத்தாமல் தொடர்ந்து வேகமாக சென்றுள்ளார். அவரை சக வாகன ஓட்டிகள் மடக்கி பிடித்து, கிண்டி போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த முருகேசனை அப்பகுதி யில் இருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலை தளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி தலைமைக்காவலர் செந்தில்குமார் மீது அதிவேகமாக காரை இயக்குதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இது குறித்து தலைமைக் காவலர் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தி, அடுத்தக்கட்ட விசாரணைக்கு வர வேண்டும் என்று எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் தலைமைக்காவலர் செந்தில்குமார் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதனன்று (மே 21) காலை சென்னை தரமணி ரயில் நிலைய மைதானத்திற்கு தலைமைக் காவலர் செந்தில்குமார் பெட்ரோல் கேனுடன் வந்துள்ளார். பின்னர், திடீரென யாரும் எதிர்பாராத வகையில் தனக்குத் தானே பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் சுமார் 80 விழுக்காடு தீக்காயங்களுடன் தலைமைக் காவலர் செந்தில்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார். இதையடுத்து தரமணி போலீசார் தலைமைக்காவலர் செந்தில்குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எறும்பு தின்னிகள் பறிமுதல்:  4 பேரை பிடித்து வனத்துறை விசாரணை தாம்பரம், மே 21-  தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே மர்ம நபர்கள் சிலர் எறும்பு தின்னிகள் வைத்திருப்பதாக, சென்னை வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பணியகத்திற்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில், தாம்பரம் வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று அங்கிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 2 எறும்பு தின்னிகள் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், 4 பேரையும் தாம்பரம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மூலம் திருவொற்றியூரை சேர்ந்த 3 பேர் ஆந்திராவிற்கு சென்று எறும்பு தின்னிகளை வாங்கி வந்து, பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.40 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. எறும்பு தின்னிகளின் செதில்களை வைத்து செருப்பு, பெல்ட் போன்றவை சீனாவில் தயாரிக்கப்பட்டு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல இதில் ஆண்மை குறைவு போன்ற சில பிரச்சனைகளுக்கு மருத்துவ குணம் உள்ளது என நம்பிக்கை உள்ளதால் இவை அதிக அளவில் கடத்தப்படுகிறது. சட்டத்திற்கு விரோதமாக கடத்தப்படுகிற எந்த ஒரு வனவிலங்காக இருந்தாலும், அது குறித்த தகவலை பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தங்கம் விலை உயர்வு சென்னை,மே 21 – சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, புதனன்று (மே 21) 22 கேரட் கிராமுக்கு ரூ.220 அதிகரித்து, ரூ.8,930-க்கும்; சவரனுக்கு ரூ.1,760 அதிகரித்து, ரூ.71,440-க்கும் விற்பனையானது. அதே போல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1,11,000-க்கும் விற்பனையானது.

ஓய்வூதிய நிதி ஆணையத்தை ரத்து செய்க

ஓய்வூதிய நிதி ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும், அங்கன்வாடி, சத்துணவு, ஆஷா போன்ற ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (மே 20) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தென்சென்னை மாவட்டத் தலைவர் கோபிநாதன் தலைமை தாங்கினார், மாநில பொருளாளர் சா.டானியல்  ஜெயசிங், மாநிலச் செயலாளர் விஜயகுமரன், வடசென்னை மாவட்டத் தலைவர் சிவக்குமார், செயலாளர் ம.அந்தோணிசாமி உள்ளிட்டோர் பேசினர்.

5 விதிமீறல்களுக்கு மட்டுமே இனி அபராதம்!  சென்னை காவல்ஆணையர் உத்தரவு

சென்னை, மே 21- சென்னையில் இனி 5 வகையான விதி மீறல்களுக்கு மட்டுமே போலீசார் அபராதம் விதிக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் அருண் உத்தர விட்டுள்ளார். சாலை விபத்துக்களை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், அறிவுரை வழங்கியும் வருகின்றனர். ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட 25 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. பிரதான சாலைகளில் போக்குவரத்து போலீசார் கும்பலாக நின்று வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடு வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டு வருகின்றது. இந்த நிலையில் போக்குவரத்து போலீசார் 5 வகையான விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே இனி அபராதம் விதிக்க வேண்டும் என்று ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல், இருவருக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது, போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்ட (நோ என்ட்ரி) பகுதியில் வாகனம் ஓட்டு வது, அதிவேகமாக வாகனத்தை இயக்கு தல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட உள்ளது. மேலும், கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி  பட்டா இல்லாததால் நலத்திட்டங்களை பெறமுடியாமல் தவிக்கும் அருந்ததியர் மக்கள்

திருவள்ளூர், மே 21- பொன்னேரி வட்டத்திற்குட் பட்ட கொடூர் ஊராட்சியில் அடங்கிய அருந்ததியினருக்கு கணினி பட்டாவழங்காததால் அரசின் நலத்திட்டங்கள் பெற முடியாமல் தவிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட கொடூர் ஊராட்சியில் அடங்கிய அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில்  40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு அரசு  பட்டா வழங்கியது. 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பட்டாவை கணினியில் பதிவேற்றம் செய்யவில்லை. கணினி பட்டாவாக இல்லாததால் ஏற்கெனவே கொடுத்த பட்டா எதற்கும் பயன்படவில்லை. பல முறை மனு அளித்தும் பலனில்லை. இந்த நிலையில் ஜமாபந்தியில் புதனன்று (மே 21),  அருந்ததியர்  மக்கள் பொன்னேரி வட்டாட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர்.உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறி வித்துள்ளனர்.

சென்னையில் இன்று மின்தடை

சென்னை,மே 21- சென்னையில் வியாழ னன்று (மே 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநி யோகம் நிறுத்தப்படும். அதன்படி, ஆவடி பகுதியில், ஆவடி சோதனைச் சாவடி, என்.எம்.சாலை, நந்தவன மேட்டூர், கன்னிகாபுரம், திருமலைராஜபுரம் மற்றும் நேருநகர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.