ரயிலில் கஞ்சா கடத்தல்
சேலம், ஏப்.10- சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தி செல்வதும் அதனை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ரயில்வே போதை பொருள் தடுப்பு போலீசார் ரயில் களில் தீவிரமாக கண்கா ணித்து வருகிறார்கள். ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் ரயிலில் வியாழனன்று (ஏப்.10) போதை பொருள் தடுப்பு போலீசார் சோதனை செய்தனர். அப்போது கேட்பாரற்று கிடந்த ஒரு கைப்பையை எடுத்து சோதனை செய்த போது அதில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. மேலும் அதற்கு யாரும் உரிமை கோராத நிலையில் அதனை கொண்டு வந்தவர் யார்? என்று தெரியவில்லை.இதையடுத்து கேமரா வில் பதிவான காட்சிகளை வைத்து ரெயில்வே போலீ சார் கஞ்சா கடத்தி கொண்டு வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூரில் விரிவான அறிவியல் பூங்கா அமைக்கப்படும்
கிருஷ்ணகிரி, ஏப்.10- ஓசூரில் விரிவான அறிவியல் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் பள்ளியில் கற்ற அறிவியல் சம்பந்தமான உண்மைகளுக்கான விளக்கங்களை பொதுவாக யூடியூப் மற்றும் கூகுள் போன்ற தேடுபொறிகளில் தேடிப் பெறுகின்றனர்.ஆனால் அறிவியல் பூங்காவில் பலவகையான தொழில் நுட்ப அறிவியல் செயல்பாடுகளை தாங்களாகவே அங்கே தரப்பட்ட விளக்கங்களை படித்து,கருவிகளை தொட்டு,செய்முறை செய்து பார்த்து ( Practical) கற்றுக்கொள்ளும் வண்ணம் தேவையான உபகரணங்கள் திறந்த வெளியில் பூங்காவில் வைக்கப்பட்டிருக்கும். கருவிகளில் விளையாடியும் , சிந்தித்தும்,அறிவியல்,பொறியியல் கணக்கு போன்ற தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ளுவதன் மூலம் மாணவர்களின் தனித் திறன்களை வெளிகொண்டுவர அறிவியல் பூங்கா மிகவும் பயனுள்ளதாக அமையும். இத்தகைய சிறப்பு வாய்ந்த அறிவியல் பூங்காவை ஓசூரில் அமைக்க ஒசூர் மாநகராட்சி சார்பில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கிருஷ்ணகிரி மாவட்ட குழுவின் சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்க்கிறோம் என நிர்வாகிகள் சேதுராமன்,சிவகுமார்,சந்திரசேகர் தெரிவித்தனர்.
கொடமாண்டபட்டியில் மின்மாற்றி பழுது : பொதுமக்கள் அவதி
கிருஷ்ணகிரி, ஏப்.10 - மத்தூர் அருகே உள்ள கொடமாண்டபட்டி மின்சார வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட மாதம்பதி முருகன் கோவில் அருகே உள்ள (டிரான்ஸ்பரம்) மின்மாற்றி பழுதாகியுள்ளது. 15 நாட்களாகியும் இது வரை பழுது பார்க்கப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். விவசாயிகள் மோட்டார் பம்ப் செட் இயக்க முடியாததால் பயிர்கள் அனைத்தும் கருகி வீணாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மின்மாற்றி சீர்படுத்த பலமுறை மனுக்கள் அளித்தும் மின் வாரியத்தினர் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். வாடும் பயிரைக் கண்டு விவசாயிகளும்,குடிக்கக்கூட நீரின்றி பொதுமக்களும் அவதிப்பட்டு வருவதால் வட்டாட்சியர் தலையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் அருகே ரூ.51 லட்சம் மோசடி செய்த பெண் கைது
கடலூர், ஏப்.10 - திருச்சோபுரத்தில் ரூ.51,50,000 வாங்கிக் கொண்டு திருப்பி தராமல் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கடலூர் முதுநகரை சேர்ந்த வேல்முருகன் மனைவி உமாராணி டி ஐ ஜி யிடம் மனு கொடுத்தார். அதில் தனது கணவர் சிங்கப்பூரில் எலக்ட்ரிஷன் வேலை செய்து வந்ததாகவும், தற்போது மீன்பிடித் தொழில் செய்து வருவதாகவும், எனக்கு பழக்கமான திருச்சோபுரத்தைச் சேர்ந்த அனிதா என்பவர் திருச்சோபுரத்தில் ரத்த பரிசோதனை லேப் நடத்தி வருகிறார். அவருடைய மாமா மகன் சுந்தர் வெட்டிவேர் மற்றும் முந்திரி வியாபாரம் செய்து வருவதாகவும், மேலும் லேப் விரிவாக்கிற்கு உங்களது பணத்தை கொடுத்தால் உங்களை பார்ட்னராக சேர்த்து அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார் . இதனை நம்பி 8 தவணைகளில் ரூபாய். 51,50,000 கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட உமாராணி என்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக தெரிந்து அவரது வீட்டுக்கு சென்று கேட்டபோது பணத்தை கொடுக்க முடியாது என கூறி மிரட்டி வருவதாகவும் நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனுவில் தெரிவித்திருந்தார். கடலூர் மாவட்ட குற்ற பிரிவில் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ரமேஷ் மனைவி அனிதா (வயது 34) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.