tamilnadu

img

பாஜக - ஆர்எஸ்எஸ் கும்பலால் பிரஜாபதி அடிகளார் உயிருக்கு ஆபத்து :பாதுகாப்பு வழங்க முதல்வரிடம் சிபிஎம் கோரிக்கை

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கும்பலால் பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளாரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே தமிழக முதல்வர் தலையிட்டு அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.  

தலைமை செயலகத்தில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஎம் சட்டமன்றக்குழுத்தலைவர் நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினர் தில்லிபாபு ஆகியோர் நேரில் சந்தித்தனர்.  

அப்போவது அவர்கள், முதல்வரிடம் சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதற்கும், நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு கோருகிற மசோதா நிறைவேற்றியதற்கும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றியதற்கும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் அமைத்ததற்கும், இடஒதுக்கீடு அமலாக்கப்பட்ட விதம் குறித்து கண்காணிக்க சமூக நீதி கண்காணிப்புக்குழு அமைத்ததற்கும், பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடுவது, விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி. அவர்களை பெருமைபடுத்தும் அறிவிப்புகள், பாரதியார் பிறந்த நாளை பள்ளி குழந்தை விழா உள்ளிட்ட பல முற்போக்கான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியும், பாராட்டுதல்களும் தெரிவித்தனர்.      

மேலும், நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள செல்வி ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி நியமிக்கப்பட்டதற்கும் நன்றி தெரிவித்தனர்.

புதிய வேளாண் சட்டம் மூலம் விவசாயத்தை முற்றாக கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைத்து நாட்டை சூறையாட முயற்சிக்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து, நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து செப்டம்பர் 27ல் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தை தமிழகத்தில் வெற்றியடைய செய்ய தி.மு.க. ஆதரவு நல்கிட வேண்டுமென ஆதரவு கோரினர். அதற்கு  தமிழக முதல்வர்  ஏற்கனவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம், அத்தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் வகையில் போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவிப்போம் என தெரிவித்தார்.

மேலும், முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தனர். அதில் தமிழகத்தில் சிறந்த ஆன்மீகவாதியாகவும் அதேசமயம் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவின் மதவெறியை எதிர்த்து உறுதியாக போராடி வரும் பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளாரின் உயிருக்கு பாஜக - ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்களால் விடுக்கப்பட்டுவரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாத்திட அவருக்கு காவல் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். நெய்வேலி காவல்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுப்பிரமணியன் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள இழப்பீட்டுத் தொகையினை வழங்கிட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகையினை உயர்த்தி வழங்கிட வேண்டும்.   மத்திய கால கடன்களாக மாற்றப்பட்ட குறுகிய கால வேளாண் கடன் பாக்கிகளை ரத்து செய்திட வேண்டும். பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.  

அதனை பெற்றுக்கொண்டு கோரிக்கைகளை படித்து பார்த்த முதல்வர் உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

;