tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காலர் டியூன் மூலம் இணையதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு!

சென்னை, டிச.22- ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் வீடியோ கால் வாயிலாகவும், செல்போன் அழைப்பின் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.  இந்த நிலையில், சைபர் கிரைம் குற்ற சம்பவங்கள் தொடர்பாக, மத்திய தொலைத் தொடர்புத்துறை, தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதாவது, சைபர் கிரைம் விழிப்புணர்வு வாசகங்களை செல்போன் காலர் டியூனாக அமைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதன்படி, தற்போது, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும், தங்களின் வாடிக்கையாளர்கள் செல்போன் எண்ணின் காலர் டியூனாக, ‘சைபர் கிரைம்’ விழிப்புணர்வு வாசகங்களை நிறுவி உள்ளது. இந்த விழிப்புணர்வு வாசகங்கள் அடுத்த 3 மாதங்களுக்கு, நாள்தோறும் 8 முதல் 10 முறை ஒலிபரப்பாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு வாசகங்களுக்கு பிறகே, அழைப்புகள் செல்கின்றன.

மின் விபத்து உயிரிழப்புகளுக்கு  இழப்பீடு ரூ.10 லட்சமாக உயர்வு

சென்னை, டிச. 22- பொது இடங்களில் மின் விபத்துகளால் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு மின்சார வாரியம் வழங்கும் நிவாரண தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முழு பார்வை பாதிப்பு, 2 கை, கால்களும் செயலிழந்தால் வழங்கப்படும் நிவாரணம் ரூ.3 லட்சமாகவும், ஒரு கை, கால் செயலிழப்புக்கு நிவாரணம் ரூ.1.50 லட்சமாகவும் உயர்த்தி மின்சார வாரியம் அரசாணை வெளியிட்டுள்ளது.