tamilnadu

img

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை...

சென்னை:
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வீடுகள் மற்றும் 57 இடங்களில் - சென்னை, கோவை, திண்டுக்கல், காஞ்சிபுரம் பகுதிகளில் ஒரே நேரத்தில் - லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

அதிமுக அமைச்சரவையில் பத்தாண்டு காலம் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. கடந்த அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சித் துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக திமுகஅமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் ஆகியோர் 2018ஆம் ஆண்டு புகார் அளித்து இருந்தனர். ஆனால், ஒன்று கூட பதிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக ஆளுநரை சந்தித்த திமுகவினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 6 அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பட்டியலை கொடுத்தனர். அப்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் செவ்வாயன்று(ஆக.10) காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ். பி.வேலுமணி தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனக்கு நெருக்கமானவர்கள், சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோ ருக்கு சலுகை அடிப்படையில் டெண்டர் வழங்கியதாக புகார் கூறப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையிலேயே இந்த சோதனை நடந்தது.

சொகுசு பங்களா
சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் “சி புரோஸ்” என்ற பெயரில் சொகுசு வசதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலர் வசிக்கின்றனர். இந்த குடியிருப்பில் எஸ்.பி.வேலுமணிக்கும் வீடு உள்ளது. அங்கு லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.கோடம்பாக்கம் ரங்கராஜன் தெரு, ஆழ்வார்பேட்டை ஆனந்தா தெருவிலுள்ள உறவினர்கள் வீடு, முகப்பேர் நேதாஜி தெரு, தேனாம்பேட்டையிலுள்ள நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. சென்னையில் மட்டும் 16 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அடையாறிலுள்ள சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார், அபிராமபுரம் ஆடிட்டர் சலீம், அரும்பாக்கம் கிருஷ்ண சாமி,வேளச்சேரி சந்திரசேகர், வில்லி வாக்கம் தலைமை பொறியாளரான புகழேந்தி உள்ளிட்டோரின் வீடுகளி லும் சோதனை நடத்தப்பட்டன. மாதவரம் பால் பண்ணை அருகில் பேங்க் காலனி கட்டுமான நிறுவனத்திலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அம்மா நாளேடு
கோடம்பாக்கம் ரெங்கராஜ புரத்தில் கேசிபி இன்ப்ரா லிமிடட் நிறுவனம், ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் வீட்டிலும், சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள ‘நமது அம்மா’ நாளிதழ் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதன் வெளியீட் டாளராக உள்ளவர் வேலுமணியின் நெருங்கிய நண்பர் சந்திரசேகர்.

கோவை
கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் எஸ்.பி.வேலுமணியின் வீட்டுக்கு திங்களன்று காலை லஞ்ச ஒழிப்பு கூடுதல் டி.எஸ்.பி திவ்யா தலைமையில் அதிகாரிகள் சென்றனர். வீட்டிற்குள் சென்றதும் வீட்டின் கதவை உள்பக்கமாக மூடிக்கொண்டனர். வீட்டில் இருந்த யாரையும்வெளியில் செல்ல அனுமதிக்க வில்லை. வீடு முழுவதும் அங்குலம், அங்குலமாக லஞ்ச ஒழிப்புத்துறை யினர் சோதனை மேற்கொண்டனர்.தொண்டாமுத்தூர் பண்ணை வீடு, ஆர்.எஸ்.புரம் அலுவலகம் ஆகியவற்றிலும் சோதனை நடந்தது. கோவை புதூரிலுள்ள சகோதரர் அன்பரசன் வீடு, அவர் நடத்தி வரும் அறக்கட்டளை, நிறுவனத்திலும் சோதனை நடத்தினர்.எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் வடவள்ளி மகாராணி அவென்யூவில் வசித்து வரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும் பொறியாளர் சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.  வீட்டின் அருகே அவர் நடத்தி வரும் அறக்கட்டளை நிறுவனத்திலும் சோதனை நடந்தது. சந்திரசேகருக்கு சொந்தமான குளத்துப்பாளையத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனர்.மதுக்கரை நகர செயலாளர் சண்முகராஜா வீடு மற்றும் புலியகுளம் கே.சி.பி அலுவலகம் 

தொடர்ச்சி 3ம் பக்கம்

;