tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

பெண் பயிற்சி காவலர்களுக்கு அறிவுரை

திருவள்ளூர், டிச.7- காவலர் பயிற்சி பள்ளி யில் பயிற்சி எடுத்து வரும் 283 பெண் பயிற்சி காவலர்களுக்கு டிஐஜி ஆனி விஜயா அறிவுரை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 283 பெண் பயிற்சி காவலர்கள் தற்போது எஸ்.பி அலுவலம் அருகே உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி எடுத்து வருகின்றனர். இவர்களை, திருவள்ளூர் காவல் பயிற்சி பள்ளியில் காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா வியாழனன்று வருகை தந்து பார்வையிட்டார்.  

அப்போது, அந்த காவலர்களிடம் பேசும் போது, காவல்துறையில் பெண்கள் ஆற்றும் பணி மிகவும் சவாலானது. அதில் பெண்கள் சிறந்த முறையில் பணிபுரிந்து தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும்.  பெண்  காவலர்கள் மேற்கொள்ளும் பயிற்சி ஒரு சிறந்த அனுபவமாகவும் மற்றும் தன்னம்பிக்கை தருவதாகவும் இருப்பதாக பேசினார்.

மனவளர்ச்சி குன்றிய மாணவிக்கு  பாலியல் வன்கொடுமை!

சென்னை, டிச.7- சென்னை அயனாவரத்தில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அனைத்து மகளிர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அயனாவரத்தில் உள்ள இளம்பெண் ஒருவர் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவராவார். இவருக்கு சமீபத்தில் ஸ்னாப்ஷாட் எனப்படும் சோஷியல் மீடியா மூலம் சிலர் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர். இவர்களுடன் தொடர்ந்து பேசி வந்த இளம்பெண்ணிடம், சில நாட்கள் கழித்து நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பிச் சென்ற மாணவி வன்கொடுமைக்கு ஆளானார். தனக்கு நேர்ந்தது குறித்து பெற்றோரிடத்தில் மாணவி கூறவே அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஸ்னாப்ஷாட் மூலம் பழகியவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர்  கூறினர்.

சட்டவிரோத ஆள்சேர்ப்பு முகவர்களை  நம்பாதீர்
சைபர் கிரைம் எச்சரிக்கை

சென்னை, டிச.7-
 வெளிநாடுகளில் வேலை என சட்டவிரோதமாக டேட்டா என்ட்ரி மற்றும் கால் சென்டர்களில் வேலை என ஆட்சேர்ப்பு முகவர்களை நம்ப வேண்டாம் என்று பொதுமக்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு மாநில சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களை குறிவைத்து இணையம் மூலமாக விளம்பரம் செய்து பலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக இந்தியாவிலிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளில் டேட்டா என்ட்ரி மற்றும் கால் சென்டர்கள் போன்ற வேலைகளுக்கு அங்கீக ரிக்கப்பட்டாத ஏஜென்சிகளால் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. அந்த நாட்டு சைபர் மோசடி பேர்வழிகள் இந்தியாவில் சைபர் குற்றங்களை நடத்த பயன்படுத்துகிறார்கள். எனவே பொதுமக்கள் அரசால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு வேலைக்கான ஏஜென்சிகளை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு மாநில சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏரி நிரம்பியதால்  பொதுமக்கள் கொண்டாட்டம்

திருவள்ளூர், டிச.7- பெஞ்சல் புயல் கனமழையால், அம்மையார்குப்பம் ஏரி தொடர்ந்து 5ம் ஆண்டாக நிரம்பியதால், கிராம மக்கள் கிடா வெட்டி கொண்டாடினர். 

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், நீர்நிலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி காணப்பட்டது. இதில், ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி, தொடர்ந்து 5ம் ஆண்டாக தண்ணீர் நிரம்பி உபரிநீர் கடவாசல் வழியாக செல்வதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட  வாகனங்கள் ஏலம்

திருவள்ளூர், டிச.7-  மதுவிலக்கு மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படும் என மாவட்ட எஸ்பி ஆர்.சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 99 வாகனங்களில் 81 இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 15 நான்கு சக்கர வாகனங்களை திருவள்ளூர் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் வருகின்ற 19ம் தேதி காலை 10 மணியளவில் ஆயுதப்படை மைதானத்தின் அருகே 99 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக அவர்  எஸ்.பி.தெரிவித்தார்.

கவரப்பேட்டை ரயில் விபத்து: 
“குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்”
ரயில்வே டிஜிபி தகவல்!

சென்னை, டிச.7- கவரப்பேட்டை பாக்மதி ரயில் விபத்துக்கு காரணமான குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், விரைவில் குற்றம் செய்தவர்கள் யார்? என்பது குறித்தான தகவல் வெளியிடப்படும் எனவும் ரயில்வே டிஜிபி வன்னிய பெருமாள் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மோப்ப நாய்களுடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், பயணிகள் தீவிர சோதனைக்குப் பின்னரே ரயில் நிலையத்துக்குள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே டிஜிபி வன்னிய பெருமாள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தில் உள்ள அரசு இருப்புப் பாதை காவல் நிலையத்தையும் ஆய்வு செய்த டிஜிபி குற்ற வழக்குகள் குறித்து காவல் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்பொழுது பேசிய அவர், “திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் நடைபெற்ற ரயில் விபத்து சம்பந்தமாக அனைவரிடமும் விசாரணை நிறைவு பெற்று, சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியான விசாரணை பணிகளையும் தீவிரப்படுத்தி உள்ளோம். விரைவில் குற்றம் செய்தவர்கள் யார்? என்பது குறித்தான தகவல் வெளியிடப்படும். மேலும், கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு வேறு ஒரு கண்ணோட்டத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்டக் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்” எனத் தெரிவித்தார்.

ஊராட்சி பள்ளியை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீர்

திருவள்ளூர், டிச.7-  திருவள்ளூர் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் மழைக்கு திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், எஸ்.அக்ரஹாரம் ஊராட்சி, குடிகுண்டா ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு சமீபத்தில் குழந்தை நேசம் திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தில் 15 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியை சுற்றியும் மழை நீர் கடந்த ஒரு வாரமாக தேங்கி நிற்கிறது. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மாணவர்களின் பெற்றோர் அச்சம் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், மாணவ, மாணவியருக்கு குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே, உடனடியாக பள்ளியை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றவும், கழிப்பிடம், குடிநீர் வசதி செய்து தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.