tamilnadu

img

ஆதிதிராவிடர் - பழங்குடி நல ஆணையர் வயதை 75-ஆக உயர்த்தும் மசோதா நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சனிக்கிழமை (ஜூன் 29) அன்று, 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவை துறையின் அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் தாக்கல் செய்தார். அப்போது, “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியாக இருக்க வேண்டும் என்ற நிலையில், அவர்களின் அனுபவம் மற்றும் மூத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் சேவைகளைப் பயன்படுத்தும் வகையில் மேற்படி தலைவர் வயது 70 வயதில் இருந்து 75 வயது வரை பதவியில் இருப்பது அவசியமாகிறது. எனவே, இந்த நோக்கத்திற்காக அரசு, மேற்சொன்ன சட்டத்தில் திருத்தம் செய்வது என்று முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார். இதன் மீதும் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் நாகை மாலி, “வயதான நபரால் ஆணையத்தின் பணிகளை எப்படி கவனிக்க முடியும் என்பதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார். பிறகு, அமைச்சர் விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.