கடமலைக்குண்டு, ஜூன் 29- தேனி மாவட்டம் வருசநாடு அருகே மயிலாடும்பாறையில் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு பாண்டியர் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலைத் தமிழ் ஆசிரியர் மூ.செல்வம், மன்னவனூர் அரசு மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பழனி முருகன் ஆகியோர் இணைந்து, மயி லாடும்பாறை பால்வண்ண நாதர் கோயி லில் இருந்த கி.பி. 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டை கண்டறிந்து வெளிப்படுத்தி உள்ளனர்.
இக்கல்வெட்டு குறித்து தொல்லி யல் ஆய்வாளர் செல்வம் கூறியதாவது: தேனி மாவட்டம் பண்டைய காலத்தில் ‘அழநாடு’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. பிற்காலத்தில் நிருவாக காரணங்களுக்காக அழநாட்டை பல வளநாடுகளாக பிரித்தனர். அதன் அடிப்ப டையில் மலைகள் சூழ்ந்த குறிஞ்சி நில மான இன்றைய வருசநாடு பகுதியை, வரிசை நாடு என்று பெயரிட்டு அழைத்த னர். வருசநாடு என்பது தற்போது ஒரு ஊரின் பெயராக இருக்கிறது.
முற்காலத்தில் பல ஊர்களை உள்ளடக்கிய பெரும் பகுதிக்கான வரிசை நாடு என்ற பெயர் இருந்துள்ளது. வரிசை நாட்டு ஒரோமில் என கல்வெட் டில் வருவதால், வருசநாட்டின் மிக முக்கியமான ஊர்களில் ஒன்றாக மயி லாடும்பாறை விளங்கியிருப்பதை அறியமுடிகிறது. இவ்வூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொல்பழங்காலத்திலிருந்து தொடர்ந்து மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு சான்றுகளாக, நுண்கற்கால புதிய கற்கால கற்கருவிகள், பாறை ஓவியங்கள், பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள், இரும்பு உருக்கு ஆலைகள், கல்வெட்டுக்கள் போன்றன தொடர்ந்து கண்டறியப்பட்டு வரு கின்றன.
மயிலாடும்பாறை, பால் வண்ண நாதர் கோவிலில் கண்டறியப்பட்ட மூன்று வரிகள் கொண்ட இந்தத் துண்டு கல்வெட்டில் மயிலாடும்பாறை ஊரின் பழைய பெயர் ‘ஒரோமில்’ என்றும், அங்கு இருக்கும் இறைவனின் பெயர் ஒரோமிஸ்வரம் உடைய நாயனார் என்பதும் அறிய முடிகிறது. மேலும், தொண்டைமானாரின் மனைவி புன்னன் தேவாண்டாள்ளேன் என்பவர் இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனுக்கு, தினமும் திருவமது படைப்பதற்கு தானம் செய்த நிலத்தைப் பற்றி செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.
கல்வெட்டில் குறிப்பிடப்படும் தொண்டைமானார் என்பவர்கள் பாண்டிய மன்னர்களின் வள நாடுகளை நிர்வா கம் செய்யும் அதிகாரிகளாக இருந்த வர்கள். கல்வெட்டில் வரும் அணுக்கிகள் என்பது பணிப்பெண்களை குறிக்கும். தினந்தோறும் பூஜைகள் செய்ய இவர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்க லாம்.
இக்கல்வெட்டு மூலம் மயிலா டும்பாறை ஊரின் பழமையும், பாண்டிய மன்னர்களின் ஆட்சி இப்பகுதியில் செழித்து வளர்ந்துள்ளதையும் உறுதி செய்ய முடியும். மூன்று வரிகள் மட்டுமே உள்ள துண்டு கல்வெட்டாக இருப்பதால் முழுமையான செய்திகளை அறிய முடிய வில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.