tamilnadu

img

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு - நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது!  

நடிகை மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.  

நடிகை மீரா மிதுன், நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள் குறித்து தொடர் அவதூறு கருத்துகளை பரப்பி வந்தார்.

இந்த வரிசையில் பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதன் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

ஆனால் விசாரணைக்கு நடிகை மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதனால் மீரா மிதுன் ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு – சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இதையடுத்து நடிகை மீரா மிதுனை ஏப்ரல் 4 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

;