கட்டணமில்லா சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை! அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 4 - கட்டணமில்லா சிகிச்சை அளிக்க மறுக்கும் ஒன்றிய அரசின் சுகாதார திட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதனன்று (ஜூன் 4) அடையாறு தொலைபேசி இணைப்பகம் முன்பு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய அரசின் சுகாதார திட்டத்தில் சுமார் 35 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 17.60 லட்சம் பேர் ஓய்வூதியர்களாக உள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் 80 நகரங்களில் நல மையம் இயங்குகிறது. மேலும், இத்திட்டத்தில் பல தனியார் மருத்துவமனைகள் இணைந்துள்ளன. இந்த மருத்துவமனைகள், ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கான தொகையை ஒன்றிய அரசிடம் இருந்து வசூலித்துக் கொள்ளும். தமிழகத்தில் உள்ள சுமார் ஒரு லட்சம் ஓய்வூதியர்கள், ஊழியர்களுக்காக 5 இடங்களில் நல மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் புற நோயாளிகளுக்கான சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம். அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை பெற சென்னையில் சுமார் 20 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. கோவை, திருச்சி போன்ற இடங்களிலும் ஒன்றிரண்டு தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இந்த தனியார் மருத்துவமனைகளில், குறிப்பிட்ட தொகைக்கு மேல் சிகிச்சை அளிக்க மறுப்பதையும், கூடுதல் கட்டணம் கேட்பதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய அஞ்சல் மற்றும் ரயில்வே அஞ்சல் சேவை ஓய்வூதியர் சங்கத்தினர் இந்த போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பேசிய தலைவர்கள், “ஒன்றிய அரசு திட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் ஓய்வூதியர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கின்றன; சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் கேட்கின்றன. கூடுதல் தொகைக்கு ரசீது தர மறுக்கின்றன. இத்தகைய புகார்கள் மீது கூடுதல் இயக்குநர் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார். மதுரையில் ஒரு நல மையம் உருவாக்க வேண்டும், நல மையங்களின் எல்லைகளை அதிகரிக்க வேண்டும், தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டும், சுகாதார திட்டத்தில் மேலும் தனியார் மருத்துவமனைகளை இணைக்க வேண்டும்” என்றனர். சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் டி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய பொருளாளர் குமார், மாநிலச் செயலாளர் ஏ.எம்.சேகர், திருச்சி மண்டலச் செயலாளர் செல்வன், சென்னை மாவட்ட செயலாளர் ஏ.எம்.சேகர் உள்ளிட்டோர் பேசினர்.