tamilnadu

img

வருமானத்திற்கு அதிகமாக ரூ.27 கோடி சொத்து குவிப்பு: விஜயபாஸ்கர் மீதான எப்ஐஆர்!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.27 கோடி மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியது, அனுமதி அளித்தது, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக மருத்துவ உபகரணங்கள் வங்கியது என பல்வேறு வகையில் மோசடி நடந்திருப்பதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது அப்போதே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 43 இடங்களில் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

முதல் தகவல் அறிக்கை;
ஏ-1 ஆக குற்றம்சாட்டப்பட்டவர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். ஏ-2வாக இணைக்கப்பட்டிருப்பவர் அவரது மனைவி ரம்யா. இவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் 1988, இந்திய தண்டனைச் சட்டம், 2018ம் ஆண்டு திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் 1988 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக 01.04.2016 முதல் 31.03.2021 வரை இருந்த காலத்தில் சி.விஜயபாஸ்கர் பெயரிலும், அவரது மனைவி ரம்யாவின் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சத்து 56 ஆயிரத்து 736 ரூபாய் சொத்து சேர்க்கப்பட்டுள்ளது. 6.5 கோடி ரூபாய்க்கு (7 டிப்பர் லாரிகள், 10 டிரான்ஸிட் மிக்சர்கள், ஒரு ஜேசிபி) அசையும் சொத்துக்களை குவித்ததாகவும், கணக்கில் வராத வருமானம் மூலம் 53 லட்சம் ரூபாய்க்கு பிஎம்டபிள்யு கார் வாங்கியதாகவும், சென்னையில் ரூ.14 கோடி மதிப்பில் வீடு வாங்கியிருப்பதாகவும், பல்வேறு நிறுவனங்களில் 28 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்திருப்பதாகவும், 40 லட்சம் மதிப்பில் 85 சவரன் நகையை கணக்கில் வராமல் குவித்ததாகவும் எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3.99 கோடி மதிப்பிலான விவசாய நிலங்களை கணக்கில் வராத வகையில் குவித்து இருக்கிறார்.
 
அன்னை தெரசா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையை தொடங்கி முறைகேடாக பணம் வாங்கியதாகவும், அறக்கட்டளை மூலம் வரி ஏய்ப்பு செய்ததாகவும் இந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இவருக்கு சொந்தமான 14 கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது ரூ.6 கோடியே 41 லட்சம் மதிப்பில் சொத்து இருப்பதாக விஜயபாஸ்கர் கணக்கு காண்பித்துள்ளார். செலவு கணக்கு செய்தாக ரூ.34 கோடி கணக்கு காண்பித்துள்ளார். ஆனால் 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது 58 கோடியே 64 லட்சத்து 25 ஆயிரத்து 887 ரூபாய் சொத்து இருப்பதாக கணக்கு காண்பித்துள்ளார். மீதமுள்ள 27 கோடி ரூபாய் வரையிலான சொத்து எப்படி வாங்கப்பட்டது என்ற கணக்கு இல்லாத காரணத்தால் இந்த ரெய்டு நடப்பதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சொத்துக்குவிப்பு வழக்கு, ஊழல் வழக்கு என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் மீது இதுபோன்ற நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

;