tamilnadu

img

முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட 5 முக்கிய கோப்புகள்!

தமிழக முதல்வராக இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் இருக்கையில் அமர்ந்து பணிகளைத் தொடங்கினார்.

பின்னர், 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

அவை பின்வருமாறு;

1. கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின்
இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும்,
வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள
குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய்
வழங்கப்படும். அதன் படி  சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் கையெழுத்திட்டார்.

2. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு - இந்த ஆணை மே16ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.

3. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக்
கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம்
செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட
அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும்
நாளை முதல் பயணம் செய்ய  ஆணை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.

அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் நாளைமுதல் இலவசமாக பயணிக்கலாம்.

4. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைபெறும் மக்களின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும். காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனை கட்டணத்தை அரசே ஏற்கும்.

5. மனுக்கள்மீது 100 நாட்களுக்குள் தீர்வுகாண ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தை செயல்படுத்த புதிய துறை உருவாக்கம்

ஆகிய 5 முக்கிய கோப்புகளில் முதல்வர் மு.க ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.

;